விவாகரத்தான பெண்களே குறி... மேட்ரிமோனி மூலம் மோசடி செய்த நபர் சிக்கியது எப்படி?
- Reported by:VETRIVEL
- news18-tamil
- Published by:Gowtham R
Last Updated:
மதுரையில் மேட்ரிமோனி தளங்களில் 2வது திருமணத்திற்கு பதிவு செய்த பெண்களை குறிவைத்து, ஏமாற்றி நகைகளை அபகரித்த நபர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
மதுரையில் மேட்ரிமோனி தளங்களில் 2வது திருமணத்திற்கு பதிவு செய்த பெண்களை குறிவைத்து, ஏமாற்றி நகைகளை அபகரித்த நபர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சூர் வணங்கானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான கார்த்திக்ராஜா. பொறியியல் பட்டதாரியான இவர் வேலை தேடி வந்ததாகத் தெரிகிறது. அதே சமயம் பல்வேறு மேட்ரிமோனியல் தளங்களில் வெவ்வேறு பெயர்களில் வரன் தேடுபவர் போல தனது சுய விவரங்களை போலியாக பதிவு செய்து வைத்துள்ளார். கணவனை இழந்து இரண்டாவது திருமணம் செய்ய விரும்பும் பெண்களை திருமணம் செய்துகொள்வதாக விருப்பம் தெரிவித்து அப்பெண்களின் செல்போன் எண் மற்றும் சுய விபரங்களை பணம்கட்டி பெற்றுள்ளார்.
advertisement
மதுரை, விருதுநகர், சிவகாசி , ராமநாதபுரம், தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களை தொடர்புகொண்டு திருமணம் குறித்து அவர் பேசி வந்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் அவர்களில் சிலரை மதுரை சின்னசொக்கி குளத்தில் உள்ள பிரபலமான மால் ஒன்றிற்கு வெவ்வேறு நேரங்களில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். காலை 10 மணிக்கு ஒரு பெண், 12 மணிக்கு ஒரு பெண், நண்பகல் 2 மணிக்கு ஒரு பெண், மாலை 4 மணிக்கு ஒரு பெண் என இடைவெளி விட்டு ஒவ்வொரு பெண்ணாக அழைத்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதேபோல் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள மற்றொரு உணவகத்திற்கும் பெண்களை வரவழைத்து பேசியுள்ளார். இப்படியாக ஒரே நாளில் 7 பெண்களை தனித்தனியாக சந்தித்து கார்த்திக் ராஜா பேசியுள்ளார்.
advertisement
முதலில் சாதாரணமாக பேசியவர் பின் பல்வேறு சோகக் கதைகளைக் கூறி பெண்களிடமிருந்து நகைகளை தருமாறும் சில நாட்களில் திருப்பித் தந்துவிடுவதாகவும் நம்ப வைத்துள்ளார். அவர்களும், எதிர்காலத்தில் கணவராக வரப்போகிறவர் தானே என்ற நம்பிக்கையில் கேட்டவுடன் கழுத்திலிருந்த நகைகளை கழற்றிக் கொடுத்துள்ளனர். இந்த காட்சிகள் எல்லாம் அந்த மாலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
நகைகளை கொடுத்த 2 நாட்களுக்கு பின் தான், தெரிந்தது அந்த நபர் ஒரு மோசடிக்காரர் என்பது. நகைகளை கொடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து தல்லாகுளம் மற்றும் கோ.புதூர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். திருமண ஆசை காட்டி திருட்டு தனத்தில் ஈடுபட்ட கார்த்திக் ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
advertisement
அவரிடம் நடத்திய விசாரணையில் பல பெண்களிடம் பேசி நகைகளை அபகரித்ததை ஒப்புக் கொண்டார். அவரிடமிருந்து 14 சவரன் தங்க நகைகள், ரொக்கப்பணம் மற்றம் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்திருக்கும் பெண்கள் இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கும் படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
Location :
Madurai,Tamil Nadu
First Published :
Dec 10, 2023 9:14 PM IST
தமிழ் செய்திகள்/மதுரை/
விவாகரத்தான பெண்களே குறி... மேட்ரிமோனி மூலம் மோசடி செய்த நபர் சிக்கியது எப்படி?







