வங்கதேசத்தில் கலவரத்தில் பலி எண்ணிக்கை 105-ஆக உயர்வு... தமிழ்நாடு முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Written by:News Desk Tamil
- news18-tamil
- Published by:Paventhan P
Last Updated:
வங்கதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு விரைந்து உதவிகளை வழங்கிட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் வன்முறையானதால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 105-ஆக அதிகரித்துள்ளது.
1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் 30 விழுக்காடு இட ஒதுக்கீட்ட்டை அமல்படுத்தியுள்ளது. இந்த இடஒதுக்கீடு கடந்த 2018-ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை மீண்டும் அமல்படுத்த அரசு திட்டமிட்டு வரும் நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். தலைநகர் டாக்காவில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
அந்நாட்டு தொலைக்காட்சி நிலையம், சிறைச்சாலைகள் சூறையாடப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் போன நிலையில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
advertisement
வங்கதேசத்தில் இருந்து இந்தியா திரும்ப விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உரிய உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக டாக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வங்கதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான போராட்டங்களால் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் உள்ளூர் பயணங்களை தவிர்க்கவும், வெளியே நடமாடுவதை குறைக்கவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
advertisement
இந்த நிலையில், வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களை பெற்று, அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளை தொடர்பு கொண்டு இருப்பதாகவும், தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தயார் நிலையில் உள்ளதாகவும் அயலகத் தமிழர் நலன் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: துணை முதலமைச்சர் ஆகப்போகிறேனா? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
வங்கதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படின், கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
Location :
International
First Published :
Jul 20, 2024 3:26 PM IST
தமிழ் செய்திகள்/உலகம்/
வங்கதேசத்தில் கலவரத்தில் பலி எண்ணிக்கை 105-ஆக உயர்வு... தமிழ்நாடு முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு





