முகப்பு /செய்தி /விருதுநகர் / செல்போன் பேசியதால் வந்த வினை - இரண்டு மகள்களுடன் தாய் எடுத்த விபரீத முடிவு

செல்போன் பேசியதால் வந்த வினை - இரண்டு மகள்களுடன் தாய் எடுத்த விபரீத முடிவு

உயிரிழந்த ராமுத்தாய்

உயிரிழந்த ராமுத்தாய்

ராஜபாளையம் அருகே சேத்தூரில் செல்போன் பேசுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தாய் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Last Updated :
  • Sivakasi, India

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்தவர் முத்துக்குமார். வெல்டிங் தொழிலாளியான இவருக்கு ராமுத்தாய் (வயது 30) என்ற மனைவியும் 6 வயதான நிஷா மற்றும் 3 வயதான அர்ச்சனா தேவி என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை வேலை முடித்து வீட்டுக்கு வந்த முத்துக்குமார் பார்த்தபோது ராமுத்தாய் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராமுத்தாய் கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கிய முத்துக்குமார் கீழே போட்டு உடைத்துள்ளார்.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் நான்கு மணி அளவில் விளையாடிக் கொண்டிருந்த தனது மூத்த மகள் மற்றும் தூங்கிக் கொண்டிருந்த தனது இரண்டாவது மகளை அழைத்துக் கொண்டு ராமுத்தாய் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

குழந்தைகளுடன் வெளியேறிய ராமத்தாய் இரவில் வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை, அருகில் உள்ள விவசாய கிணற்றில் ராமுத்தாய் மற்றும் அவரது மூத்த மகள் நிஷா சடலமாக மிதப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.

உறவினர்களின் தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சேத்தூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், கிணற்றில் மூழ்கி இருந்த மூவரின் உடலையும் மீட்டனர். பின்னர் இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்து இறந்த சம்பவம் சேத்தூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

top videos

    செய்தியாளர் : செந்தில் குமார் (சிவகாசி)

    First published:

    Tags: Crime News, Sivakasi