விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சேவை மையங்கள் பயன்படாமல் செயலற்று இருப்பதால் அவற்றை மீண்டும் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆட்சியில் கிராம ஊராட்சி தோறும் கிராம சேவை மையங்கள் அமைக்க திட்டமிட்டு அதில் ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் இ சேவை மையங்களை செயல்படுத்தலாம் என முடிவு செய்து அதற்கென பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கிராம சேவை மைய கட்டிடங்களும் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்த கட்டிடங்கள் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பாழாகி வருகின்றன. ஒரு சில இடங்களில் அந்த கட்டிடங்களில் கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், பெரும்பாலான இடங்களில் கிராம சேவை மையங்கள் பூட்டிய நிலையில் காணப்படுகின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கிராம சேவை மையங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் கிராமப்புற மக்கள் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை பெற நகர் பகுதியில் உள்ள இ சேவை மையங்களுக்கு செல்லாமல் தங்கள் கிராமத்தில் உள்ள கிராம சேவை மையங்கள் மூலம் எளிதாக பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், கிராம சேவை மையங்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதால் மக்கள் இன்றும் சான்றிதழ்கள் பெற நகர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் இதற்கென பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அது செலவழிக்கப்பட்ட நிலையில் மக்கள் வரிப்பணம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து கிராம சேவை மையங்களை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar