விருதுநகர் மாவட்டத்தில் அறியப்படாத சுற்றுலா தளங்களும் வரலாற்று பொக்கிஷங்களும் உள்ளன. அவற்றுள் முக்கியமானது. விருதுநகர் திருமலை நாயக்கர் மஹால். ’திருமலை நாயக்கர் மஹால் மதுரையில் தானே இருக்கிறது" என்று சிந்திப்பவர்களுக்கு விருதுநகர் மாவட்டத்திலும் ஓர் குட்டி திருமலை நாயக்கர் அரண்மனை உள்ளது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அருகே உள்ளது திருமலை நாயக்கர் மஹால். வெளியில் இருந்து பார்க்க வீடு போல காட்சியளிக்கும் இந்த அரண்மனை, உட்பகுதியில் பெரிய பெரிய தூண்கள் மற்றும் வண்ணப்பூச்சுக்களை கொண்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலைப் போல காணப்படுகிறது.
நாயக்கர் கால கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ள இந்த அரண்மனை, திருமலை நாயக்கர் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வரும் போது தங்குவதற்காக கட்டப்பட்டது. மொத்தம் இரண்டு அறைகளை கொண்ட இந்த அரண்மனையில் ஒரு பகுதியை மன்னர் தங்கும் இடமாகவும், மற்றொன்றை தர்பாராகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
நாயக்கர் காலத்திற்கு பின்னர் வந்த முகலாயர்கள் சிறிது காலம் இந்த அரண்மனையை பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் இதன் ஒரு பகுதியை தாலூகா அலுவலகமாகவும் மற்றொன்றை நீதிமன்றமாகவும் பயன்படுத்தி வந்தனர்.
சுதந்திரத்திற்கு பின்னரும் இது தொடரவே இந்திய தொல்லியல் துறை இதை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்தது. அதன் பின்னர் இங்கு செயல்பட்டு வந்த அலுவலகமும், நீதிமன்றமும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.
அழிக்கப்பட்ட ஓவியங்கள்:
நீதிமன்ற பகுதியில் இன்றும் நீதிமன்ற சாட்சி கூண்டு காணப்படுகிறது. இப்பகுதியின் சுவற்றில் நாயக்கர் கால ஓவியங்கள் அழிந்த நிலையில் காணப்படுகின்றன. இவை யாவும் இப்பகுதி நீதிமன்றமாக செயல்பட்டு வந்த போது அறியாமை காரணமாக அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப்போர்:
இந்த அரண்மனையில் இரண்டாம் உலகப்போர் நினைவுச் சின்னமும் உள்ளது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஶ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 52 பேர் போரில் பங்கு பெற்று அதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் நினைவாக ஆங்கிலேயர் வைத்த கல்வெட்டு ஒன்று இந்த அரண்மனையின் வெளிப்பகுதியில் உள்ளது. இது போக 1903 ம் ஆண்டு ராணுவ வீரர்கள் வைத்த விளக்கு தூண் ஒன்றும் அரண்மனையின் வெளிப்பகுதியில் உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மனையை தற்போது இந்திய தொல்லியல் துறையினர் கையில் எடுத்து, நாயக்கர்களின் ஆட்சியை விளக்கும் விளக்கப் படங்களை வைத்து பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர்.
ஹே.. எப்புட்றா.... கண்ணாடி பாட்டினுள் தேங்காய் ஓட்டில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar