விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அரசு மதுபானக் கடையில் 20 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் மற்றும் பணம் கொள்ளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள வெம்பக்கோட்டை செல்லையாபுரம் பகுதியில் 12008 என்ற பதிவு எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த பாபு விற்பனையாளராகவும் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் சூப்பர்வைசராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு மதுபானக் கடையில் பணி முடிவடைந்து கடையை பூட்டிவிட்டு விற்பனையாளர் சென்றுள்ளார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த விற்பனையாளர் பாபு வெம்பக்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை காவல் துறையினர் சோதனை செய்து பார்த்த போது இரவு பூட்டை உடைத்து மது பாட்டில்கள் மற்றும் பணம் திருடு போனது தெரியவந்தது. சுமார் 18 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் டேபிள் கல்லாப் பெட்டியில் இருந்த பணம் ரூ.2500 திருடு போயுள்ளதாக டாஸ்மாக் மேற்பார்வையாளர் சேகர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து விருதுநகரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். மேலும் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.