விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பொன்னங்குப்பம் கிராமத்தில் நெற்பயிர்களில் குலை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகசூல் ஈட்ட முடியுமா என அச்சத்தில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் விவசாயிகள் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் நடவு செய்த சீரக சம்பா நெற்பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில், தற்போது நெற் கதிர்கள் வந்துள்ளது.
அதில் பொன்னங்குப்பம் கிராமத்தில் வளர்ந்துள்ள நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, மகசூல் பெற முடியாத நிலை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. எனவே விவசாயிகள் கவலை அடைந்து இருப்பதுடன், குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில் அடிப்படையில், விக்கிரவாண்டி வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன் தலைமையிலான வேளாண் அதிகாரிகள் குலை நோயால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் பார்வையிட்டனர்.
இது இந்த பாதிப்புக்கான காரணம் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் , ‘கடந்த மாண்டஸ் புயல் காரணமாக பூக்கும் பருவத்தில் இருந்த நெல் பயிர்களில் உள்ள பூக்கள் விழுந்து விட்டன. இதனால் நெற்பயிர்களில் பால் பிடிக்காமல் பதர் போன்று மாறியுள்ளது.
மேலும் கடும் பனிப்பொழிவு காரணமாகவும் இரவு நேரத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பதன் காரணமாகவும், காற்றில் ஈரப்பதம் கலந்து இருப்பதால் குலை நோய் தாக்குதல் நெற்பயிரில் காணப்பட்டு வருகிறது.
பொன்னங்குப்பம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை ஆய்வு செய்தோம். பயிருக்கு டிரைசைக்ளசோல் அல்லது அசாக்ஸிஸ்ட்ரோபின் மருந்தை அடிக்க விவசாயிகளுக்கு பரிந்துரை செய்தோம். இதனை ஒரு ஏக்கருக்கு 200 கிராம் வீதம் கலந்து பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மீது தெளித்து வந்தால் நிச்சயம் இதனை கட்டுப்படுத்த முடியும்” என வேளாண் துறை அதிகாரிகள் கூறினர்.
மேலும் அதிகப்படியான தாக்குதல் வருவதற்கு முன் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என அறிவுரையும் வழங்கினர். விவசாயிகளும் வேளாண் துறை அதிகாரிகள் உரிய தடுப்பு முறைகளை பின்பற்றி தற்போது நெல் பயிரில் ஏற்பட்டுள்ள நோயை தடுக்கும் வழிகளை பின்பற்ற போவதாக தெரிவித்தனர்.
இதேபோன்று மற்ற கிராமங்களில் தாக்குதல் ஏற்பட்ட போது வேளாண் அதிகாரிகளின் இந்த அறிவுரையை விவசாயிகள் பின்பற்றி நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அவர்கள் வேளாண் துறை அதிகாரிகளுக்கு நன்றியினையும் தெரிவித்துக்கொண்டனர்.
செய்தியாளர்: பூஜா, விழுப்புரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Viluppuram S22p13