விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனாங்கூரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் பழனி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் இந்த நோய் குறித்து விவரத்து ஆட்சியர் பழனி பேசுகையில், "கோமாரி நோய் பிளவுபட்ட கால் குளம்புகள் உடைய விலங்குகளை தீவிரமாக தாக்க கூடிய ஓர் வைரஸ் நச்சுயிரி நோயாகும். இது கால் மற்றும் வாய் நோய் மற்றும் காணை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோய் மாடு, ஆடு, பன்றி, மான் போன்ற விலங்குகளைப் பாதிக்கும்.
இந்நோய் தாக்குதலுக்கு உள்ளான கால்நடைகளுக்கு கடுமையான காய்ச்சலை (104 டிகிரி C) வரை உண்டாக்கும். மிக எளிதில் தொற்றக்கூடிய இந்த நோயால், பாதிப்புக்கு உள்ளான கால்நடைகளின் வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நூல் போல் தொங்கி ஒழுகி வெளியேறும். அசை போடும் போது ‘சப்பு கொட்டுவது’ போல் சப்தம் உண்டாகும். வாயின் உட்பகுதி, ஈறுகள், நாக்கு, மடி, கால் குளம்புகளின் நடுப்பகுதி ஆகியவற்றில் கொப்புளங்கள் (vesicle's) தோன்றி உடைந்து புண்ணாகும்.
இதனால் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலினால், எச்சில் தொடர்ந்து உற்பத்தியாகி ஒழுகி, குளம் போல் காட்சியளிக்கும். தீவனமும் உட்கொள்ளாது. சினை மாடுகளுக்கு “கருச்சிதைவு”(Abortion) ஏற்படும். கன்றுகள் பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலை குடிப்பதால் கன்றுகளுக்கு நோய் தாக்கி இறக்கவும் நேரிடும். இந்த வகை வைரஸ் அல்லது நச்சுயிரிகள் மூளையை பாதிப்பதால் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்கக் கூடிய பகுதி தாக்கப்பட்டு, பாதிப்புக்கு உள்ளான கால்நடைகளில் குறிப்பாக பசு மற்றும் எருமை இனங்களில் உடலின் வெப்ப நிலை உயர்ந்தே காணப்படும். இத்தகைய பாதிப்பினால் பசுக்கள் மற்றும் எருமைகள் எப்பொழுதும் இளைப்பாறிக் கொண்டே இருக்கும்.
பாதிப்புக்கு உள்ளான கால்நடைகளில் சினை பிடிக்காமல் பல மாதங்கள் வரை பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரிவரத் தீனியினை உட்கொள்ளாது. கன்றுகளிலும் நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்து விடுவதால், பால் உற்பத்தி கனிசமான அளவில் பாதிக்கப்பட்டு “பொருளாதார நஷ்டத்தை” ஏற்படுத்தக் கூடிய கொடிய நோயாகும். இந்த வைரஸ் நச்சுயிரி 300 கி.மீ வேகத்தில் காற்றின் வழியே இதர கால்நடைகளைத் தாக்கும் வல்லமை கொண்டது. பனிக்காலங்களில் கால்நடைகளில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய நோயாகும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
விழுப்புரம் கோட்டத்தில் 2,35,047 கால்நடைகள் மற்றும் திண்டிவனம் கோட்டத்தில் 2,43,782 கால்நடைகள் என மொத்தம் 4,78,829 கால்நடைகளை காத்திடும் விதமாக, 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 01.03.2023 முதல் 21.03.2023 வரை 21 நாட்களில் கால்நடை பராமரிப்புத்துறையிலுள்ள 77 தடுப்பூசி போடும் குழுக்கள் மூலம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எனவே, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இந்த சிறப்பு முகாமினை நல்ல முறையில் பயன்படுத்தி, தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளலாம்” என கேட்டுக்கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram