விழுப்புரம் அடுத்த சாலை அகரம் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வரும் ராஜரத்தினம்- பூங்கொடி தம்பதியினரின் மகள் சுபஸ்ரீ. இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவியான சுபஸ்ரீ, ஓட்டப்பந்தய வீராங்கனையாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்று வருகிறார்.
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மாணவி சுபஸ்ரீ, தனது திறமையாலும், உத்வேகத்தினாலும் சீறிப்பாய்ந்து 14 வினாடிகளில் கடந்து சாதனைப் படைத்துள்ளார். தனக்குள் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் கல்வியிலும் சரி விளையாட்டிலும் சரி சிறந்து விளங்க வேண்டும் எனவும் மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் சிறுவயதிலேயே விதைத்துக்கொண்டவர்.
தனக்கு சில குறைபாடுகள் இருந்தாலும் இலக்கை நோக்கி ஓடும் போது குறைகள் ஏதும் கண்ணுக்கு தெரியாமல் நிமிர்ந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்.
சுபஸ்ரீ குறித்து பேசிய அவரது பெற்றோர், “சுபஸ்ரீ தான் மூத்த பிள்ளை. தேஜாஸ்ரீ (5) இரண்டாவது பிள்ளை . சுபஸ்ரீ பிறக்கும் போது செவி திறன் கேட்காமலும் மற்றும் வாய் பேச முடியாத குறையுடன் பிறந்தார். ஆனாலும் எங்களுக்கு அது ஒரு பெரிய குறைபாடாகத் தெரியவில்லை.
என் மகள் வளர வளர ஓட்டப் பந்தயத்தில் ஆர்வமாக இருப்பதை கண்டறிந்து அதனை ஊக்குவித்தோம். தற்போது தேசிய அளவில் வெற்றி பெற்று சாதித்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நிச்சயமாக என் பிள்ளையை பெரிய ஆளாக கொண்டு வருவேன்” என தெரிவித்தார்.
சுபஸ்ரீக்கு பயிற்சி அளிக்கும் உடற்கல்வி ஆசிரியர்களான சோபியா சுதாகர், மற்றும் அல்போன்ஸ் அவரை பற்றி பேசும்போது, ”சுபஸ்ரீக்கு எளிதில் புரியும் வகையில் முழுக்க முழுக்க செய்கையிலும், எழுத்து வடிவிலும் பயிற்சி அளித்து வருகின்றனர். மற்ற மாணவர்களை காட்டிலும் சுபஸ்ரீக்கு அதிக பயிற்சியும் அதிக கவனமும் செலுத்தி போட்டிகளுக்கு தயார்படுத்தி வருகிறோம்.
மாநில அளவில் வெற்றி பெற்றார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள பள்ளியில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் சுபஸ்ரீ கலந்து கொண்டார்.
தற்போது தேசிய அளவில், நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம், 4×100 மீட்டர் ரிலேயில் (Relay ) தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் என நான்கு பதக்கங்கள் பெற்று, விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார்.
நிச்சயமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபடுவோம் என உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் புஷ்பராஜா கூறினர்.
விருதுநகர் பொரிச்ச பரோட்டா எப்படி செய்றாங்க தெரியுமா? விளக்கும் பரோட்டா மாஸ்டர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Viluppuram S22p13