விழுப்புரம் மாவட்டம் பிடாகம் அடுத்துள்ளது குச்சிப்பாளையம். இப்பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி, தமிழகன் ஆகியோர் ஆற்றில் சில பானை ஓடுகளை பார்த்துள்ளனர். பார்ப்பதற்கு மற்ற பானை ஓடுகளை விட வித்தியாசமாக இருந்ததன் காரணமாக, விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், எழுத்தாளருமான செங்குட்டுவனுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து பேரங்கியூர்- பிடாகம் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கருப்பு, சிவப்பு பானைஓடுகள் மற்றும் இதர பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பானை ஓடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி எழுத்தாளர் செங்குட்டுவன் கூறுகையில்,
தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பில் கள ஆய்வு செய்துகொண்டிருந்தோம் .அப்போது கருப்பு, சிவப்பு, கருப்பும் சிவப்பும் கலந்த 3 வகையான பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. கருப்பு நிற பானை ஓடுகளின் தோள் பகுதிகளில் பள்ளவரி எனப்படும் அலங்கார கோடுகள் அமைந்திருப்பது போன்ற பல பானை ஓடுகள் கண்டறிந்தோம்.இவை ஆற்றின் மேற்குப் பகுதியில் இருந்து தண்ணீரில் அடித்து வரப்பட்டு இருக்க வேண்டும்.
இந்தப் பானை ஓடுகள் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும். இதனை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் மண்டல உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த தொல்லியலாளர் துளசிராமன் உறுதிப்படுத்தி பானை ஓடுகளின் காலத்தை சொன்னார்.
மேலும்,தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பு ஆய்வில் மண்ணால் ஆன சுடுமண் தண்ணீர் குழாயின் ஒரு பகுதி, மிகச் சிறிய மட்கலயம், மட்கலயம் ஒன்றின் மூடி, சுடுமண் தக்களி, சுடுமண் கெண்டியின் மூக்குப் பகுதி, உடைந்த சுடுமண் கலயத்தின் விளிம்பு பகுதி போன்ற பல பொருட்களும் கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தினால் மேலும் பல சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் செங்குட்டுவன் கூறினார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.