தென்கயிலாயம், தட்சிணா கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
இத்தனை சிறப்பு மிகுந்த இக்கோவிலில் சித்திரைத் தேர் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டுக்கான விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 6 ஆம் தேதி சுவாமி அம்பாள் கற்பகத்தரு, கிளி வாகனத்திலும், 7 ஆம் தேதி பூதம், கமலம் வாகனத்திலும், 8 ஆம் தேதி கைலாசபர்வதம், அன்னம் வாகனத்திலும் வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மே 9 ஆம் தேதி காலை நூற்றுக்கால் மண்டபத்தில் செட்டிப்பெண்ணுத்து மருத்துவம் பார்க்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை சுவாமி அம்பாளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து 11 ஆம் தேதி இரவு சுவாமி, அம்பாள் நந்திகேசுவரர், யாளி வாகனத்திலும், 12 ஆம் தேதி தங்க குதிரை, பல்லக்கு வாகனத்திலும் வீதி வலம் வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கியது. மேஷ லக்னத்தில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. மலைக்கோட்டையை சுற்றியுள்ள வீதிகளில் தேர் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
செய்தியாளர் ,என்.மணிகண்டன், திருச்சி.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.