திருச்சியில் மாநகரைவிட புறநகரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன.
திருச்சி மாநகரில் இந்த ஆண்டில் இதுவரை 80 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் புறநகரில் 114 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநகரை விட கிராமப்புற மற்றும் புறநகரங்களில் போக்சோ வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் போக்சோ என்ற சட்டத்தை கடந்த 2012 ம் ஆண்டு ஒன்றிய அரசு இயற்றியது. இந்த சட்டத்தின் படி ஒரு குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டால் அதை செய்த அந்த குற்றவாளிக்கு, குறைந்த பட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும் .
அதேபோல் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர் அல்லது காவல்துறையில் இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். இது தான் இந்த சட்டத்தின் சாராம்சம்.
போக்சோ போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டும் இந்தியா முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 10 முதல் 15 குழந்தைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் வன்புணர்வு என்று தொடர்ந்து பாதிக்கப்பட்டு தான் இருக்கின்றனர். திருச்சி மாநகரில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சுமார் 34 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கிகளில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் திருச்சி புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் ஜனவரி முதல் தற்போது வரை மொத்தம் 80 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 114 பேர் குற்றவாளிகள். அவர்களில் 93 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாநகர பகுதியை காட்டிலும் புறநகரில் போக்சோ குற்றங்கள் அதிகரித்துள்ளன.
இதுகுறித்து அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் தாமஸ்கூறுகையில், ”பெரும்பாலும், இளம் பருவத்தில் உள்ள மாணவிகள் காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு ஓடி போகிறார்கள். இவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். அதற்கு காரணம் பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவதில்லை. பருவ வயது அதில் வரும் ஹார்மோன் மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு வரவில்லை, அதை ஏற்படுத்துவதற்கு பெற்றோரும் முன்வரவில்லை .
எனவே குழந்தைகள் செல்போனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதில் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மை என்று ஏற்றுக் கொள்கிறார்கள். எனவே இந்த பிரச்சனையை கையாள பள்ளிகளில் கட்டாயம் ஒரு மனநல ஆலோசகர்கள், உளவியலாளர்கள் இருக்க வேண்டும்.
மாநகரங்களில் பெண் பிள்ளைகள் மிகவும் தெளிவுடன் பிரச்சனைகளை அணுகுகின்றனர். அவர்களுக்கு பெற்றோர்களும் நல்ல நண்பர்களாக இருப்பதால் பெண் பிள்ளைகள் தங்கள் பிரச்சனைகளை பெற்றோரிடம் அச்சமின்றி தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த நிலை கிராமங்களில் இல்லை அது தான் அதிக எண்ணிக்கையில் போக்சோ குற்றங்கள் கிராமங்களில் நடைபெற காரணம் ” என்று கூறினார்.
இப்போது தான் குழந்தை திருமணம் செய்வது தவறு என்பதை உணர்ந்த சிலர் அதை தடுக்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பது அதிகரித்துள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையில் குழந்தைத் திருமணங்களும் தடுக்கப்படுகிறது. அதேபோல் போக்சோ சட்டம் குறித்தும் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு வந்தால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Sexual abuse, Trichy