திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சியின் ஒரு பள்ளி உள்பட 89 அரசு பள்ளிகளும், 46 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் 28 பள்ளிகளும், 81 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 13 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கான ஒரு உண்டு உறைவிடப்பள்ளியும் என மொத்தம் 259 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இதில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இதில் திருச்சி மாவட்டத்தில் 15,522 மாணவர்களும், 17,599 மாணவிகளும் என மொத்தம் 33,121 மாணவர்கள் +2 தேர்வு எழுதினார்கள்.
கடந்த கல்வி ஆண்டில் (2020-21) கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையும், +2 மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சியும் வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு (2019-20) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.94% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவ - மாணவிகள் தேர்ச்சி விகிதம்:
நடப்பு கல்வியாண்டில் (2021-22) திருச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.93% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.31%, மாணவிகள் 98.24% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 87 பள்ளிகளில் 100 விழுக்காடு மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 50 மெட்ரிக் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் பள்ளிகள் 15 பள்ளிகளும், அரசு பள்ளிகள் 12ம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ம், ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஒன்றும் அடங்கும்.
திருச்சி மாவட்டத்தில் +2 பொது தேர்வில் பாடம் வாரியாக 355 மாணவர்கள் நூற்றுக்கு, நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
இதில் மொழி பாடங்களில் 23 மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 2 மாணவர்களும், பொருளியல் பாடத்தில் 25 மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 28 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 50 மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 46 மாணவர்களும், தாவரவியல் பாடத்தில் ஒரு மாணவரும், கணினி அறிவியல் பாடத்தில் 114 மாணவர்களும், கணிதம் பாடத்தில் 65 மாணவர்களும், நுண் உயிரியல் பாடத்தில் ஒரு மாணவரும் என 355 மாணவர்கள் அந்தந்த பாடங்களில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு 92.25% மாணவர்கள் தேர்ச்சி.
திருச்சி மாவட்டத்தில் 5 மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஒரு நகராட்சி பள்ளி உள்பட 192 அரசு பள்ளிகளும், 55 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் 41 பள்ளிகளும், 135 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 27 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப்பள்ளிகள் மூன்றும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒரு பள்ளியும் என மொத்தம் 455 உயர்நிலை பள்ளிகள் உள்ளன. இதில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இதில் திருச்சி மாவட்டத்தில் 17,713 மாணவர்களும், 17, 540 மாணவிகளும் என மொத்தம் 35,253 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள். கடந்த கல்வி ஆண்டில் (2020-21) கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையின் காரணமாக, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கப்பட்டது.
அதற்கு முந்தைய கல்வி ஆண்டில் (2019-20) கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதன் காரணமாக, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய 2018-19 ஆம் கல்வி ஆண்டில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 96.45% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நடப்பு கல்வியாண்டில் (2021-22) திருச்சி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 92.25% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் மாணவர்கள் 87.64%, மாணவிகள் 96.78% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
செய்தியாளர் - என்.மணிகண்டன்.
உங்கள் நகரத்திலிருந்து(Trichy)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.