ஒவ்வொரு மனிதனுக்கும் வீடு என்பது தான் கடைசி அடைக்கலமாகவும் நிம்மதியை தரும் ஒரு இடமாகவும் உள்ளது. அந்த அளவிற்கு வீடு என்பது ஒருவரின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும் சிலர் தாங்கள் வசிக்கும் வீட்டின் மேல் அதிக பற்று வைத்து, பெரிய மாற்றங்கள் எதையும் செய்யாமல் தங்கள் வாழ்நாளில் கடைசி வரை அதே இடத்திலேயே வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் உண்மையிலேயே ஒரு மனிதன் எவ்வளவு நாட்கள் ஒரே வீட்டில் எந்த வித மாற்றங்களும் இல்லாமல் வாழ முடியும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா?
பிரிட்டனைச் சேர்ந்த எல்சி ஆல்கிளாக் என்ற பெண்மணி இதற்கு வாழும் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இரு படுக்கை அறைகள் கொண்ட ஒரே வீட்டில் கிட்டத்தட்ட கடந்த 105 வருடங்களாக அவர் வாழ்ந்து வருகிறார். மேலும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டால் கூட தன்னால் இனி இந்த வீட்டை விட்டு வேறு எங்கேயும் சென்று வசிக்க முடியாது என்று அவர் உறுதியாக கூறியுள்ளார். இங்கிலாந்தின் ஹத்வைட்டில் உள்ள பார்க்கர் தெருவில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் தான் எல்சி 1918 ஆம் ஆண்டு பிறந்தார்.
அன்றிலிருந்து இன்று வரை அவர் அந்த வீட்டை விட்டு வேறு எங்கும் சென்று வசிக்கவில்லை. அப்பெண்மணிக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் ஆறு பேர குழந்தைகள் மட்டுமல்லாமல், 14 கொள்ளு பேரன்களும், 11 எள்ளு பேரன்களும் உள்ளனர். இன்னும் சில நாட்களில் தனது 105ஆவது பிறந்த நாளை அப்பெண்மணி கொண்டாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தான் 105 வருடங்களாக வாழ்ந்த அதே வீட்டிலேயே தனது 105வது பிறந்த நாளை பெண்மணி கொண்டாட உள்ளார். தற்போது வரை இரண்டு உலகப் போர்கள், நிலவில் மனிதன் முதல் காலடி வைத்த தருணம், பெருந்தொற்றுக்கள் என அனைத்தையுமே இப்பெண்மணி சந்தித்துள்ளார்.
Read More : விண்ணில் ராக்கெட் ஏவப்படுவதை படம் பிடித்த நபர்... விமான பயணத்தின் போது நடந்த சம்பவம்..
இவை அனைத்தின் போதும் அந்த வீட்டிலேயே அவர் வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 22 பிரதமர்கள் மற்றும் 5 முடியாட்சிகள் ஆகியவற்றையும் பெண்மணி கண்டுள்ளார். தனது பெற்றோருடன் வசித்து வந்த பெண்மணிக்கு மொத்தம் ஐந்து பேர் உடன் பிறந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். 1941 ஆம் ஆண்டு திருமணமான பின்னும் அதே வீட்டில் பெண்மணி வசித்து வந்துள்ளார்.
இதைப் பற்றி 2022 ஆம் ஆண்டு அவர் அளித்த பேட்டி ஒன்றில், இந்த வீட்டை ஆரம்பத்தில் கடன் வாங்கியே சொந்தம் ஆக்கிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “அந்த நேரத்தில் எங்களுக்கு 250 பவுண்டுகள் கிடைக்கவில்லை. இதற்காக கவுன்சிலுக்கு சென்று கடன் வாங்கி அதன் பிறகு தான் இந்த வீட்டை நாங்கள் சொந்தமாக்கி கொண்டோம். பெரிதாக இதில் எந்தவித மாற்றங்களும் நாங்கள் செய்ததில்லை. இங்கு இருப்பதைவிட நான் வேறு எங்கேயும் சந்தோஷமாக இருந்ததில்லை” என்று அப்பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
அந்த காலத்தில் இவர் 250 பவுண்டுகளுக்கு வாங்கிய இந்த வீட்டின் தற்போதைய மதிப்பானது 75 ஆயிரம் பவுண்டுகள் ஆகும். இதன் இந்திய மதிப்பு 73.3 இலட்சங்கள் ஆகும். தற்போது எல்சி-யின் கணவர் காலமாகிவிட்டாலும், தன்னுடைய மகன் ரேவுடன் கடந்த 26 ஆண்டுகளாக இப்பெண்மணி வாழ்ந்து வருகிறார். தன்னுடைய தாயைப் பற்றி கூறிய ரே, தன்னுடைய தாய் எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாகவும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் ஆர்வமாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.