குடும்ப பொக்கிஷங்கள் விலை மதிப்பற்றவை. ஒரு தலைமுறையினரிடம் இருந்து மற்றொரு தலைமுறை, அதற்கடுத்து இன்னொரு தலைமுறை என்று வாழையடி, வாழையாக கை மாறி வந்து கொண்டே இருக்கும். நிலமோ, தங்கமோ அல்லது சாதாரண பொருளோ, அது நம் கையை விட்டு போகையில் மிகுந்த வலி ஏற்படும். நமக்கு வலிக்கிறதோ இல்லையோ, நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நிச்சயமாக மனம் உடைந்து போவார்கள். குடும்ப பொக்கிஷங்களை கைவிட்டு, மதிப்பு வாய்ந்த எத்தனை பொருட்களை நீங்கள் சம்பாதித்தாலும் அந்த பாரம்பரியத்திற்கு எதுவுமே ஈடாகாது. இதனால், முடிந்த வரையில் குடும்ப பொக்கிஷங்களை காப்பாற்றுவதற்கு எல்லோருமே மிகுந்த முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
ஆனால், தங்கள் குடும்பத்தின் பொக்கிஷமாகக் கருதப்படுகின்ற பழங்கால ஓவியம் ஒன்றை விற்பனை செய்யவிருப்பது குறித்து ரெடிட் இணையதளத்தில் ஒரு நபர் பதிவிட்ட நிலையில், அதுகுறித்த கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இத்தனைக்கும் அவசரமான மருத்துவ தேவைகளுக்காகவோ, அத்தியாவசிய தேவைகளுக்காகவோ அவர் இந்த ஓவியத்தை விற்கவில்லை. தன்னுடைய திருமணத்தை ஆடம்பரமாக நடத்த விரும்பிய நிலையில், பொக்கிஷத்தை விற்பனை செய்ய முன்வந்துள்ளார்.இதுகுறித்த அவரது பதிவில், “நானும், எனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணும் வேறொரு மாநிலத்திற்கு சென்று ஆடம்பரமாக திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.
எங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வாக இந்த திருமணம் அமையப் போகிறது. ஆகவே, முடிந்தவரை இதை பசுமையான நினைவுகளாக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பதிவை வெளியிட்ட நபருக்கு வயது 39 ஆகும். அவருக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு வயது 38 ஆகும். முன்னதாக, கடந்த ஜனவரியில் இவரது தந்தை உயிரிழந்துவிட்டார். அதற்கு முன்னதாக அவர் எழுதிய உயிலின்படி, குடும்பத்தில் மூத்த மகனான இவருக்கு அந்த ஓவியம் வழங்கப்பட்டிருக்கிறது. இளைய மகனுக்கு ஓவியம் வழங்கப்படவில்லை. தம்பிக்கு அந்த ஓவியத்தை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், உயில் ஷரத்துகளின்படி அண்ணன் தான் அதுகுறித்து முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளார்.
இதுகுறித்து ரெடிட் தளத்தில் காணப்படும் அந்தப் பதிவில், “எனக்கு குடும்ப பாரம்பரியங்களின் மீது பெரிய அளவுக்கு நம்பிக்கை கிடையாது. அது அழகான பொருளாகவே இருந்தாலும், அதனுடன் எனக்கு பெரிய ஒட்டுதல் கிடையாது. என் தந்தை குறித்து நிறைய நினைவுகள் என் வசம் உள்ளன. ஆனால், இந்த ஓவியத்தை கொண்டு நினைவுகூர நான் விரும்பவில்லை.
அதே சமயம், இந்த ஓவியத்தை என்னிடம் ஒப்படைக்கும் என் தந்தையின் முடிவு குறித்து எனது இளைய சகோதரன் மிகுந்த அதிருப்தியில் உள்ளான். நானும், எனக்கு வரப் போகும் மனைவியும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அதன்படி எனக்குப் பின்னால் இந்த ஓவியம் யாருக்கும் செல்லப்போவதில்லை. ஆனால், என் தம்பி இதை பெறும் பட்சத்தில் அவனது வாரிசுகளுக்கு ஒப்படைக்கலாம் என்று விரும்புகிறான்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
பொக்கிஷத்தை விற்கும் முயற்சிக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பதிவர் எழுதியுள்ள கமெண்டில், “30 வயதான பிறகும் கூட உங்கள் திருமணத்திறான பணத்தை நீங்கள் சம்பாதிக்கவில்லையா? உங்கள் குடும்ப பொக்கிஷத்தை விற்றுதான் இதைச் செய்ய வேண்டுமா? இதை நீங்கள் விற்றுவிடுவீர்கள் என்று தெரிந்திருந்தால் உங்கள் தந்தை இதை உங்கள் தம்பியிடம் கொடுத்திருப்பார்’’ என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவாளர் வெளியிட்டுள்ள கமெண்டில், “உங்கள் சௌகரியத்திற்காக உங்கள் குடும்ப வரலாற்றை விற்பனை செய்யப் போகிறீர்கள். இதற்காக நீங்கள் வருத்தம் அடைவீர்கள். உலகம் உங்களைச் சுற்றி மட்டும் இயங்கவில்லை’’ என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.