டெல்டா மாவட்டமான திருவாரூரில் நெல் சாகுபடியே முதன்மையான தொழிலாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் நெல் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாகவும் திருவாரூர் விளங்கி வருகிறது. அதே நேரத்தில் இயற்கை பேரிடர்கள் மற்றும் தண்ணீர் பிரச்னை உள்ளிட்டவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் நெல்லுக்கு மாற்றாக பருத்தியின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர் திருவாரூர் விவசாயிகள்.
குறிப்பாக தண்ணீர் பிரச்னை கருத்தில் கொண்டு, கோடையில் நெல் சாகுபடியை கைவிட்டுவிட்டு பருத்தி சாகுபடியை தொடங்கியுள்ளனர். நெல் சாகுபடிக்கு ஆகும் செலவை விட குறைவான செலவே பருத்திக்கு தேவைப்படுகிறது என்பதாலும், நான்கில் ஒரு பங்கு நீரே பருத்திக்கு போதுமானது என்பதால் அதிக லாபம் ஈட்ட முடிகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்று, பல்வேறு சாதகமான அம்சங்கள் இருப்பதால், வலங்கைமான், மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பருத்தி சாகுபடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.... முதலில் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையான பருத்தி, கடந்த ஆண்டு 110 ரூபாயை எட்டியது.அதன் விளைவாக மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 41 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு நல்ல விளைச்சலும் கண்டுள்ளது..
அதே நேரத்தில், பருத்தியை விற்பனை செய்வதில் விவசாயிகள் சில நடைமுறை சிக்கல்களையும் சந்திக்கின்றனர்... நேரடி கொள்முதல் நிலையம் மூலம் நெற்களை கொள்முதல் செய்வதுபோன்று, பருத்தியையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைக்கின்றனர்.தற்போது தனியார் நிறுவனங்களே நேரடியாக வந்து விவசாயிகளிடம் பருத்தியின் தரத்திற்கு விலை நிர்ணயம் செய்து வாங்கிச் செல்கின்றனர்.அவர்கள் சில பெரிய விவசாயிகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றன என்ற சந்தேகமும் விவசாயிகளிடம் உள்ளது.
இதனை அரசு கருத்தில் கொண்டு, பருத்தி விற்பனை நடைபெறும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Money18, Thiruvarur