நெல்லையில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் தொடங்கப்பட்ட 12-ஆவது மாவட்ட அருங்காட்சியகத்தில் கற்களைக்கொண்டு மனிதன் படைத்த கலைக் கருவூங்களும், ஓவியங்கள், நாணயங்கள், பழங்குடிகளின் பண்பாட்டு மாதிரிகள் எனப் பிரித்து அவற்றின் இயற்கை சூழலில் காட்சிக்கு உள்ளன.
கற்சிற்பப் பூங்கா
அருங்காட்சியகத்தினுள் நம்மை வரவேற்கும் முகமாக இம்மாவட்டத்தில் கிடைத்த சமணத் திருமேனிகளும், திருமால், காளி, துர்க்கை, கருப்பசாமி, வீரர்களின் நினைவுக் கற்கள், கல்வெட்டுகள் என பரவலாகவும், மிக நேர்த்தியாகவும் பீடங்களின் மேல் அழகாக அமைந்துள்ளன. கி.பி 1547-ம் ஆண்டு இளவேலங்கால் என்னுமிடத்தில் திருநெல்வேலிப் பெருமாள் என்னும் வெட்டும் பெருமாளையும் அவரது படையினரையும், வெங்கலராசனும் அவனது நாயக்கர் படையும் திடீரென தாக்கிக் கொண்டனர்.
இத்தாக்குதலில் பாண்டியர் படையினை சேர்ந்த பத்துப் பேர் கொல்லப்பட்டனர். இவ்வீரர்களின் நினைவாக அவர்களுடைய வீரமும், புகழும், பெயரும் பொறிக்கப்பட்டு எடுக்கப்பட்ட நடுகற்கள் பத்தும் சிற்ப பூங்காவில் அழகுடன் காட்சி தருகின்றன.
அறிமுகக் கூடம்
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கோபுரங்கள், நெல்லை மாவட்ட குகைக்கோயில்கள், சமணப்படுகைகள், குற்றால அருவிகள், சங்கரன் கோயில் சுவர் ஓவியங்கள், சுடுமண் குதிரைகள், பத்தமடைப் பாய்கள், வளைந்து வளைந்து செல்லும் மருதூர் அணைக்கட்டு, பாணதீர்த்த அருவி என மாவட்டத்தின் சிறப்பை நம்முன் காட்டும் பலகனியாக அறிமுகக்கூடம் அமைந்துள்ளது.
மானுடவியல் கூடம்
உலகின் மிகப் பெருங்கற்கால பெரிய மயானமான ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட நிலையிலும், அவற்றில் கிடைத்த கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், இரும்புப் பொருட்கள், போர்க்கருவிகளும், உழவுக்கருவிகளும், தாங்கிகளின் மீது காட்சியளிக்கின்றன.
குத்தீட்டி, கலப்பை, சொராஸ்டிரியன் வகை நான்கு முனை வாள்களும் காட்சிக்கு உள்ளன. அத்திரம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்கோடாரிகள், வெட்டும் கருவிகள், பிளக்கும் கோடாரி போன்ற பழைய கற்காலக் கருவிகளும், சாயர்புரத்தில் சேகரிக்கப்பட்ட நுண்ணிய கற்கால கருவிகளும், பழங்குடி மக்களின் கோயில்களில் இருந்து சேகரிக்கப்பட்ட புதிய கற்கால கருவிகளும் இங்கு காட்சியிலுள்ளன. பாண்டிய நாட்டின் பழங்குடிகளின் வேட்டைகருவியாகவும், போர்க்கருவியாகவும் பயன்படுத்திய மரி, இரும்பு வளரிகள் காட்சியில் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் வாழும் காணி, பழியர், காட்டுநாயக்கர் போன்ற பழங்குடி மக்களின் தொழில் , பண்பாடு, வாழ்க்கை நிலை முதலியவற்றை எடுத்துக்காட்டும் விதமாக அவர்கள் வசிக்கும் காடு, செய்யும் தொழில் பின்னணியில் அம்மக்கள் உபயோகித்து வரும் பொருட்களுடன் தனித்தனியாக காட்சிப்பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டுப்புற மக்களின் கலை பண்பாடு, சுடுமண் பொம்மைகள், கரகம், பாவைக்கூத்து, திருஷ்டிப் பொம்மைகள், மற்றும் இசைக்கருவிகள் நாதசுவரம், தவில், தப்பட்டம், புல்லாங்குழல் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஊமைத்துரை கூடம்
வெள்ளையரை வேரறுக்க வீறு கொண்ட வேங்கையாய் விளங்கிய வீரபாண்டியன் கட்டபொம்மனின் சகோதரர் ஊமைதுரையை கைது செய்து ஆங்கிலேயர் அடைத்து வைத்திருந்த இடம் தன் இந்த ஊமைத்துரை கூடம். அதனை நினைவு கூறும் விதமாக இக்கூடத்தில் வீரபண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைதுரை வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வண்ணப் புகைபடங்கள், அவர்கள் பயன்படுத்திய போர்கருவிகள் முதலியனவற்றை காணலாம்.
தொல்லியல் கூடம்
காரைக்குடியில் வாழ்ந்த கலைப்பிரியர்கள் தங்கள் வீடுகளில் அன்றாடம் உபயோகித்து வரும் வெற்றிலைப்பெட்டி, பாக்கு வெட்டி, சுண்ணாம்புக்குவளை, எச்சில் பணிக்கம், நறுமணப்புகை குடுவை, மயில்கழுத்து கூஜா, தேர்களில் கிடைத்த மரச் சிற்பங்களும், கி.மு5 ஆம் நூற்றாண்டு முதல் குசானை, குப்தர், சாளுக்கியர், இஸ்லாமியர், சோழர், பாண்டியர், விஜய நகரத்தார், கிழக்கிந்தியக் கம்பெணியார் வரையில் வெளியிடப்பட்ட நாணயங்களின் மாதிரிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.
இயற்கை அறிவியல் கூடம்
திருநெல்வேலி அரசு சித்த மருத்துவ கல்லூரியில் இருந்து பெறப்பட்ட ஹொர்பேரியம், பிரஸ் செய்யப்பட்ட பலவகையான மூலிகைகளுடன் மருந்து தயாரிக்க பயன்படும் காய்களும், பட்டைகளும், எண்ணெய் வித்துக்களும் கண்ணாடி ஜாடிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடல் வாழ் உயிரினங்கள், நண்டுகள், மீன்கள், கடல் பாசிகள், கடல் குதிரைகள் போன்றவைகளும் அவற்றின் சூழலோடு காட்சித் தருகின்றன.
சூரிய மண்டலத்தை சுற்றியுள்ள ஒன்பது கிரங்களும் மாணவர்கள் பார்த்த உடன் அறிந்து கொள்ளும் விதமாக ஓவியங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. கிரைசோலைட், சுண்ணாம்புக்கல், அம்மோனைட், குவாட்சு, டோலமைட், ஹேமடைட், புளூரைட் போன்ற கனிமங்களும் பாசில்கள் எனப்படும் கல்மாறிகளும் காட்சியில் உள்ளன.
ஓவியக் கூடம்
எண்ணெய் வண்ண ஓவியங்கள், நீர் வண்ண ஓவியங்கள், கலம்காரி மற்றும் பத்திக் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு தமிழகத்தின் மிகப்பழைமையான ஓவியக்கலையின் சிறப்புகளை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli