நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலேயே உருவாகி, தமிழ் நாட்டிலேயே கடலில் கலக்கிற ஒரே நதி தாமிரபணி. வற்றாத ஜீவ நதிகளில் ஒன்றான தாமிரபரணியின் பிறப்பிடம் மேற்குத் தொடர்ச்சி மலை மீதுள்ள பூங்குளம். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயம் செழிக்க உதவும் இந்த புன்னிய நதி, தற்போது கழிவு நீர் கலப்பால் மாசடைந்து வருகிறது.
விகேபுரம் மதுரா கோட்ஸ் ஆலை முதல் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஆலைகள் வரை, பெரும்பாலான ஆலைகளின் கழிவுகள் தாமிபரணியில் கலக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. சேரன்மகாதேவி பகுதியில் சன் பேப்பர் மில் நிர்வாகத்தினர் கால்வாய் வழியாக ஆற்றில் கழிவுநீரை கலக்கின்றனர். அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், கோபால சமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுகளும் நேரடியாக ஆற்றிலேயே கலக்கப்படுகின்றன.
தனியார் ஆலைகள் மட்டுமன்றி, பொதுமக்களும் தங்கள் வீட்டுக் கழிவுகளை ஆற்றில் கலப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், தாமிரபணியை பாதுகாக்க, தன்னார்வலர்கள் சிலர், முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். எனினும் அரசு அதீத அக்கறை காட்டினால் மட்டுமே பலன் கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தாமிரபரணி மாசடைவது குறித்து, நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையாக முடிவடைந்தால் கழிவுகள், ஆற்றில் கலக்கப்படுவதை முற்றிலுமாக தடுக்க முடியும் என்று கூறினார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி மீண்டும் பழைய பொழிவுடன் பொங்கி பாய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.