திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வாவு அறக்கட்டளையின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார். கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹுர் ரப்பானி தமது தலைமையுரையில், " எங்கே தீமையைக் காண்கிறீர்களோ அதைக் கையால் தடுத்துப் பாருங்கள், இல்லை வாயால் தடுத்துப் பேசுங்கள், முடியாவிட்டால் மனதால் நீங்கள் தடுத்துப்பாருங்கள் என்று நபிகள் நாயகம் குறிப்பிட்டார். சமூக சீர்திருத்தவாதிகளை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறது" என்று பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார். ஆட்சிக்குழுத் தலைவர் அல்ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முஹம்மது நவாப் ஹூசைன், பேராசிரியர் எஸ்.அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றும் போது, "எல்லோரும் இறைவனால் படைக்கப்பட்டோம், எந்த வேறுபாடும் இல்லை. மனிதனாக நாம் எப்படி வாழவேண்டும் என்று சமயங்கள் கற்றுத்தருகின்றன. சமைதல் என்றால் பக்குவமாதல் என்பது பொருள். மனதைச் சமைப்பதுதான் சமயம். மிகச்சிறந்த பிள்ளைகளைச் சமயமும் குடும்பமும் உருவாக்குகிறது. இலட்சக்கணக்கான மனிதர்களைச் சமயங்கள் அச்சுறுத்தி ஒழுக்கத்திற்குள் வைக்கிறது. நல்லவனோடு சேர்ப்பது, நல்லவர்களோடு வாழ்வது, நல்லவனாக வாழ்வது வாழ்வின் நோக்கம். தென்னை மரத்தைத் தென்னம்பிள்ளை என்பார்கள். ஒரு பிள்ளை தரும் பலனை மரம் தருவதால் தென்னம்பிள்ளை என்பர். தலாக் சொல்வதை இறைவன் விரும்புவதில்லை. இறைவனோடு இறையச்சத்தோடு மனிதர்கள் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள். நடந்து முடிந்த தவறுகளிலிருந்து மீண்டு வர இஸ்லாம் வழி சொல்கிறது. வாழ்வின் உயர் லட்சியத்தை வாழ்வியலாக நபிகள் பெருமனார் வாழ்ந்து காட்டினார். எது இறைவனால் முடிவு செய்யப்பட்டதோ அதுவே நடக்கும். கவியரசு கண்ணதாசன் திருக்குர்ஆன் குறித்து எழுதவேண்டும் என நினைத்தார். கிறிஸ்தவர்கள் ஏசுநாதரின் வாழ்வியலை இயேசு காவியமாக எழுதவேண்டினார்கள். இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது கட்டப்பட்டிருக்கிறது. இஸ்லாம், இறைவனைச் சரணடை என்கிறது.
இறைவன் விரும்பியதே நடக்கிறது. எதையும் தன் பொறுப்பிலே வைக்காமல் இறைவனிடம் விட்டுவிடுகிறான். அதையே இன்ஷா அல்லாஹ் என்கிறார்கள். தர்மம் செய்வது புண்ணியம் என்று இருப்போருக்கு மத்தியில் தர்மம் செய்வதைக் கடமையாகச் சொல்கிறது இஸ்லாம். ஐந்து கடமைகளையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஏழை வாழ்வதற்குச் செல்வந்தன் உதவ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. உலகின் 4 இல் 1 பங்கு மக்களை இஸ்லாம் சென்றடைந்திருக்கிறது. சமூகத்தைக் கட்டுவதற்குத் தொழுகை பயன்படுகிறது. சமூகப் பிணைப்பை நபிகள் நாயகம் உணர்த்தினார். உலகம் முழுக்க சிறப்பு நாட்களைக் குடித்துக் கொண்டாட, இஸ்லாம் முப்பது நாட்கள் நோன்பு வைத்துப் பசியோடு நோன்பு நோற்று முப்பது நாட்கள் கழித்துப் பெருநாளைக் கொண்டாட வைக்கிறது. சீனத்து முஸ்லீமோடு இந்திய முஸ்லீமோடு ஹஜ் என்கிற புனிதப் பயணம் வழிவகுக்கிறது. எல்லா வேற்றுமைகளும் மறைந்து, அனைவரும் ஒன்று என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. உலகம் தழுவிய ஒற்றுமை மனிதனாக இஸ்லாம் உலக மக்களைக் கட்டுகிறது. ஒழுக்க விதிகளோடு நடத்தைக் கோளங்களை இஸ்லாம் பேசுகிறது. அவரவர் மார்க்கம் வேறு, அவரவர் வழிகள் வேறு. உலகம் முழுவதும் கிரிமினல் குற்றத்திற்கான தண்டனை ஒன்றுதான்.
ALSO READ | நெல்லையில் நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்.. யூஸ் பண்ணிக்கோங்க மக்களே!
ஆனால் சிவில் சட்டங்கள் வேறுபடுகிறது சனநாயகம் என்பது பெரும்பான்மைச் சர்வாதிகாரமோ என்று எண்ணத் தோன்றுகிறது. சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் நாடு இந்தியா என்று நேரு கருதினார். அவரவர் அவரவர் விருப்பப்படி வாழ உரிமை இருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு செயல்முறையையும் நபிகள் நாயகம் வகுத்துத் தந்துள்ளார். உலக மனிதனை உருவாக்குவதே இஸ்லாமின் ஒரே நோக்கம். நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்து ஒற்றுமையை நபிகள் நாயகம் வலியுறுத்தி வெற்றிகண்டார். பெருமனார் பெரும் சிந்தனையாளர். மனித மேம்பாடு விரும்பியவர். அன்பை போதித்தவர், நபிகளார் சொன்னதை அவர் காலத்திலேயே நபிமொழிகளாகப் பதிவு செய்தார்கள். இறைவன் வாக்கு தான் கடைப்பிடிக்கக்கூடியது என்றார் பெருமனார். சகோதரத்துவத்தை இஸ்லாம் என்றும் பேசுகிறது. எதையும் சரியாகச் சிந்தியுங்கள் எதையும் சரியாகச் செய்யுங்கள். பரந்த மனப்பான்மை என்றும் தமிழகத்தில் உண்டு. காந்தி பிரார்த்தனைக் கூட்டங்களில் திருக்குர்ஆன் வாசித்தார். சிறந்த ஆட்சி உமர் கலீபா ஆட்சி என்று மகாத்மா காந்திஜி கூறினார் " என்று பேசினார். துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ.செய்யது முஹம்மது காஜா நன்றி கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli