விலங்கிடமிருந்து மனிதனுக்கு தொற்று நோய் பரவினால் அதற்கு வௌவால்கள் காரணம் என காட்டுத் தீ போல் வௌவால்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. வௌவால்கள் மீது சுமத்தப்படும் வீண்பழி ஏன் என்பது குறித்து திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தனியார் தொண்டு அமைப்பைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சாரதா பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
வௌவால்கள் மீது வீண் பழி
அவர் கூறுகையில், “உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸும் வௌவால்கள் மூலம் பரவியதாக வீண் பழி சுமத்தப்பட்டது. திருநெல்வேலி பகுதிகளில் வௌவால்களின் வாழ்க்கை முறை, அவற்றால் மனித குலத்துக்கு கிடைக்கும் சூழலியல் நன்மைகள் குறித்து அகத்தியமலை இயற்கைவள பாதுகாப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கோண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில் வௌவால்கள் குறித்த நல்ல செய்திகளே கிடைத்துள்ளன.
எந்த வைரசும் பரவவில்லை
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பல நூற்றாண்டு காலமாக மனித குடியிருப்புகளை ஒட்டியுள்ள மரங்கள், பாழடைந்த கட்டிடங்கள், பழமையான கோவில்களில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் வாழ்ந்து வருகின்றன. அதேநேரம், அருகில் வாழும் மக்களுக்கு வௌவால்கள் மூலம் எந்த வைரஸும் பரவியதாக இன்று வரை எந்தப் பதிவும் இல்லை.
இவ்வளவு சிற்றினங்களா?
பாலூட்டிகளில் பறக்கும் திறனைபெற்றுள்ள ஒரே உயிரினம் வௌவால்கள். புவியில் 1,200 சிற்றினங்களை சேர்ந்த வௌவால்கள் உள்ளன. புவியில் வாழும் மொத்தப் பாலூட்டிகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு வௌவால்கள். இந்தியாவில் 120 சிற்றினங்களை சேர்ந்த வௌவால்கள் உள்ளன. தமிழ்ச் சமூகமும், வௌவால்களும் பல ஆயிரம் ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளன என்பதை நற்றிணை பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன.
வௌவால்களின் பங்கு
நமது கிராமப்புறங்களில் மரங்களிலும் பாழடைந்த கட்டிடங்களிலும் 3 வகையான பழந்தின்னி வௌவால்களை ஆயிரக்கணக்கில் பார்க்கலாம். இவை பழங்கள், பூக்கள், தளிர்கள் போன்றவற்றைத் தின்றுவிதைப்பரவல், மகரந்தச் சேர்க்கைக்குப் பெரும் பங்காற்றுகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் மலர்கிற இலவம் பஞ்சு மர மலர்கள் போன்றவற்றில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில் இந்த வகை வௌவால்களின் பங்கு முக்கியமானது.
பல இடங்களில் ஆக்கிரமிப்பு
தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் அதிகளவில் உள்ள அத்தி, இலுப்பை, நாவல் போன்ற மரங்கள் வௌவால்களால் விதைக்கப்பட்டவையே. நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்களைச் சேர்ந்த பூச்சியுண்ணும் வௌவால்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் 6 சிற்றினங்களைச் சேர்ந்த வௌவால்கள் கிராமப்புறங்களில் உள்ள குகைகள், பாழடைந்த கட்டிடங்கள், பாலங்கள், பழமையான கோவில்கள் போன்ற இடங்களில் பார்க்கலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உழவனின் நண்பன்
இந்த பூச்சி உண்ணும் வௌவால்கள் மீயொலி அலையை எழுப்பி பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன. விளைநிலங்களில் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும் பூச்சிகளை உண்பதன் மூலம், உழவர்களின் நண்பனாக வௌவால்கள் விளங்குகின்றன. ஒரு சிறிய வௌவால்கள் ஓர் இரவில் 500 பூச்சிகளை உண்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன” இவ்வாறு வௌவால்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார் சாரதா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli