கணவன் - மனைவி தகராறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய விசாரணை கைதிகள் 10 பேரை கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய காவலர்கள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங், கொடூரமாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 10 பேரின் பற்களையும் கட்டிங் பிளேயர் கொண்டு பிடுங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிதாக திருமணமான இளைஞர் உட்பட 2 பேரின் உயிர்நாடியை உதவி காவல் கண்காணிப்பாளர் தாக்கியதாகவும், புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காவலர்கள் தாக்கியதில் 3 இளைஞர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை என புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை எழுப்பிய நிலையில், உதவி ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். அதற்கான ஆவணங்கள் அனைத்தும் உதவி ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் தனது விசாரணையை தொடங்கியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு, உதவி காவல்துறை கண்காணிப்பாளரிடம் விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : டிஎன்பிஎஸ்சியில் சீர்திருத்தம் தேவை.. அமைச்சர் பிடிஆர் கருத்து..!
இந்நிலையில், விசாரணை கைதிகளை பல்லை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகாரில் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்பீர்சிங் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அம்பாசமுத்திரம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தொடர்புடைய 8 நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட நபர்களான லட்சுமி சங்கர், சுபாஷ், வெங்கடேஷ் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதே வேளையில், விசாரணை நடத்தும் சேரன்மகாதேவி உதவி ஆட்சியரும், குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பல்பீர் சிங்கும், ஒரே நேரத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பதால் விசாரணை நியாயமாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நெல்லை மாவட்ட ஆட்சியர் நேரடியாக விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ambasamudram Constituency, Police, Tirunelveli, TN Police