மணல் திருட்டை தடுத்ததற்காக மாய்ந்து கிடக்கும் இந்த நேர்மையான கிராம நிர்வாக அலுவலர்தான் லூர்து பிரான்சிஸ். மீன்பிடித் தொழிலாளியான இயேசுவடியான் என்பவருக்கு பிறந்த 3-வது மகன்.ஏழ்மையான நிலையில் இருந்த இயேசுவடியானின் 5 பிள்ளைகளில், லூர்து பிரான்சிஸ் மட்டுமே அரசுப் பணியில் இணைந்தார். 20 ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய அவரின் நேர்மையான நடவடிக்கைகளால் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அவ்வாறு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, கோவில்பத்து கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக புகார்கள் குவிந்ததால், இரவு நேரங்களில் சென்று ஆய்வு செய்தார்.அப்படி, ஆய்வு செய்யும் போதுதான், ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் சென்றதைக் கண்ட லூர்து பிரான்சிஸ், இது தொடர்பாக ஏப்ரல் 13-ம் தேதி முறப்பநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனால், அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. லூர்து பிரான்சிஸை கொலை செய்ய ஏற்கனவே முயற்சி நடந்ததும், அது தொடர்பாக ஆட்சியரிடம் அவர் புகார் தெரிவித்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இதுதொடர்பாக பெண் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் பேசிய பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது.
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு அரசிடம் ஒப்படைத்தபோது, ஆக்கிரமிப்பாளர்கள் லூர்து பிரான்சிஸை மிரட்டும் நோக்கில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தனது நேர்மையான நடவடிக்கைகளால் தொடர்ந்து இடையூறுகளை சந்தித்தார் 56 வயதான லூர்து பிரான்சிஸ். அவர் கடந்த 3 மாதங்களாக பணியிட மாறுதல் கோரிவந்த நிலையில், அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரத்தைச் சேர்ந்த, லூர்து பிரான்சிஸ் - டோன் சிட்டால் தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் என 3 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் ராகேஷ் ஆல்வின் ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் மார்ஷல் இயேசுவடியான் சட்டப்படிப்பு முடித்துவிட்டு, மதுரை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் நீதிபதி பணிக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க; முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.
லூர்து பிரான்சிஸின் மகள் அருள் விசி ராகேல் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். குழந்தைகளை நன்றாக படிக்கவைத்த லூர்து பிரான்சிஸ், தனது மகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அவரது மகளுக்கு அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டது, அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Murder