ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து நாளையுடன் ( மே 22) 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு காரணமான காவல் துறையினர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஒய்வு பெற்ற நீதிபதி அருணஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதில் துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான 17 காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. சிபிஐ-ம் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பும் - ஆதரவும்..
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்களும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது ஆனால் இதுவரை ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டுக்கு காரணமான காவல் துறையினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் படிக்க : 200 மாட்டுவண்டிகளில் குலதெய்வ கோவில் வழிபாட்டுக்கு செல்லும் 56 கிராம மக்கள்.. கமுதியில் பழமை மாறாத வழக்கம்..
துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் உறவினர்:
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவைச் சேர்ந்தவரும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பிரின்ஸ்டன் உறவினருமான கெபிஸ்டன் கூறுகையில், ஸ்டெர்லைட் கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் மீது இதுவரை எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம்
அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் 17 காவல் துறையினர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி ஐந்து ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் ஸ்டெர்லைட் ஆலை இங்கிருந்து அகற்றப்படவில்லை. திமுக அரசு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த 22 ஆம் தேதி ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார்.
ஸ்டெர்லைட் போராட்டக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் , தற்போதைய அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு சட்டம் முயற்சி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவோம் என்று கூறினார்கள். ஆனால், இதுவரை சிறப்பு சட்டம் இயற்றப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகள் அனைவரும் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று சொன்னார்கள்.
மேலும் படிக்க : இந்த நாயின் விலை ரூ.80 ஆயிரம்..! அமெரிக்கன் காக்கர் நாய் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்..!
ஆனால் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியிட்ட பிறகும் முதல்வர் உறுதி அளித்தார். ஆனால் அந்த உறுதி இப்போது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும். சிபிஐ விசாரணையும் சதிவலை பின்னப்பட்டு தான் நடக்கிறது.
சிபிஐ வழக்கில் ஒரே ஒரு காவல்துறை அதிகாரி மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். அப்பாவி மக்கள் 100 பேரை குற்றவாளிகளாக சித்தரித்துள்ளனர். சிபிஐ விசாரணையை புறந்தள்ள வேண்டும் அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிட்ட படி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்..
துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள்
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் ஆதி ஆனந்த் நம்மிடம் கூறுகையில், துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது சமூகநீதி அரசு என்றும் சொல்லப்படும் இந்த அரசு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தான் இன்னும் குரல் கொடுத்து வருகிறது. மக்களுக்கு இன்னும் சரியான நீதி கிடைக்கவில்லை. துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பலமுறை நாங்கள் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் எங்கள் கண்முன்னே என்றும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர் அரசு உடனடியாக காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
பி.முரளிகணேஷ் (தூத்துக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thoothukudi firing, Thoothukudi gun shoot, Thoothukudi protest, Thoothukudi Sterlite, Tuticorin, Tuticorin gun shot