தூத்துக்குடி அருகே யூடியூப் பார்த்து வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களை போலீசார் துரத்தி பிடித்தனர்.
தவம் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பொருட்களை திருடிவிட்டு போலீசாரிடம் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதே போன்று தூத்துக்குடி அருகேயும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வள்ளிநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து தூத்துக்குடியில் உள்ள கார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
மாரிமுத்துவின் உறவினரான மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் சுகாதாரத்துறையில் தற்காலிக பணியாளராக கொசு மருந்து தெளிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து விளாத்திகுளம் மதுரை ரோட்டில் அமைந்துள்ள ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான "ராஜலட்சுமி ஜூவல்லர்ஸ்" என்ற நகைக்கடையில் கேஸ் வெல்டிங் மிஷினை பயன்படுத்தி கடை ஷட்டரை உடைத்து கடையில் இருந்த 13 சவரன் தங்க நகை, 25 கிலோ மதிக்கத்தக்க வெள்ளி கொலுசு, வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.12,500 ரொக்க பணம் என மொத்தமாக சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாட்ச்மேன் ஒருவர் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் கொள்ளையர்களை துரத்தி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நகை, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் இருவரும் திருடுவதற்கு தயாராகி தேவையான பொருட்களை நகைக்கடையின் மாடியில் வைத்துள்ளனர். தொடர்ந்து மறுநாள் நகைக்கடையின் மாடிக்கு சென்ற இவர்கள், கடை பூட்டிய பிறகு நள்ளிரவில் கீழே இறங்கி யூடியூப் பார்த்து கட்டிங் மெஷின், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு ஷட்டரை உடைத்து கடைக்குள் நுழைந்துள்ளனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவை செலோடேப் போட்டு ஒட்டியுள்ளனர்.
தொடர்ந்து கடைக்குள் சென்ற அவர்கள் கடையில் இருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணம் என அனைத்தையும் சுருட்டி கொண்டு, வடிவேலு பட பாணியில் மோப்பநாயிடம் சிக்கி விடக்கூடாது என நினைத்து திருடிய இடம் முதல் கடை வாசல் வரை மிளகாய் பொடியை தூவியுள்ளனர்.இப்படி பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வந்த இவர்கள், மாடியில் இருந்து கீழே குதிக்கும் போது கால் இடறி கீழே விழுந்து வாட்ச்மேன் கண்ணில் சிக்கியுள்ளனர்.
வாட்ச்மேனோ சற்றும் தாமதிக்காமல் போலீசாரை அழைத்துள்ளார். அப்போது இருவரும் போலீசாரிடம் மாட்டி கொண்டுள்ளனர். மேலும், அவர்களை சோதித்ததில் இருவரிடமும் போலி கட்சி விசிட்டிங் கார்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருவருமே தங்களை ஒரு கட்சி நிர்வாகிகள் என கூறி கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஏற்கனவே இவர்கள், இந்த கடைக்கு அருகில் உள்ள கடையில் கொள்ளையடிக்க முயற்சித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: மகேஷ்வரன், தூத்துக்குடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Theft, Thoothukudi, Tuticorin