தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகராக இருந்த லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து கடந்த 13ந் தேதி புகார் அளித்தார். அதனால் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆற்றின் அக்கரை முறப்பநாடு என்றால் இந்த கரை அகரம் கிராமம் முறப்பநாட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அகரம் என்ற சிறு கிராமம். இங்கு வசிக்கும் சிறு விவசாயி பாலகிருஷ்ணன். இவர் தான் வாழும் ஊரிலேயே 1 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதோடு ஆடுகள் வளர்ப்பு பணிகளையும் செய்து வருகிறார்.
இவர் கடந்த 2019 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வல்லநாடு ஊராட்சி 1 வது வார்டு பஞ்சாயத்து உறுப்பினராகவும் உள்ளார். அதே ஆண்டு இறுதியில் அகரம் ஊரின் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதாக கூறி கரை பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளை குறித்து தனது வார்டு மக்கள் புகாரை பெற்று முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
உயர் அதிகாரிகளுக்கு 200க்கும் மேற்பட்ட மனுக்களையும் அளித்துள்ளார். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் மணல் மாஃபியாக்களால் விவசாயி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விவசாயி வழக்கு தொடுத்துள்ளார்.
மதுரை கிளை நீதிமன்றத்தில் கடந்த 14.10.2020 ல் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்தும் நடந்த அடுத்த கட்ட விசாரணைகளில் மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு மணல் கொள்ளையர்களால் கொலை மிரட்டல் இருப்பதை உறுதி செய்த நீதிபதிகள் புகழேந்தி மற்றும் கிருபாகரன் இருவரும் 19.11.2020 அன்று மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
அதனடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆடு மேய்க்கும் விவசாயி பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகின்றார்.
இதுகுறித்து விவசாயி பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், “ எனது ஊர் தாமிரபரணியில் இருந்து 200 மீட்டர் தொலைவிலேயே உள்ளது. முன்பெல்லாம் ஒன்றரை பனை உயரத்திற்கு ஆற்றங்கரையில் மணல் நிரம்பி இருக்கும். பாலைவனத்திற்கு நடுவே தண்ணீர் செல்வது போல தாமிரபரணி அமைந்திருந்தது. ஆனால், தற்போது முற்றிலுமாக மணல் அள்ளப்பட்டு விட்டது. கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மண்ணையும் இரவு நேரங்களில் தொடர்ந்து அள்ளி வருகின்றனர். மணல் கொள்ளையில் இளைஞர்களே அதிகம் ஈடுபடுகிறார்கள். அதிகமான லாபம் கிடைக்கிறது. 407 மாடல் வேனில் மணல் கடத்துகின்றனர். இதற்கு வருவாய்த் துறை, காவல் துறையில் ஒரு சில அதிகாரிகள் லாப நோக்கத்துடன் உடந்தையாக இருக்கின்றனர்.
இவர்கள் குறித்து புகார் கூறினால் காவல் நிலையத்தில் நம் பேச்சுக்கும், புகாருக்கு மதிப்பு கொடுப்பதில்லை. கண்டு கொள்வதில்லை. உயர் அதிகாரிகள் இந்த மனு மீது விசாரணையே செய்வதில்லை. எனவே மணல் கொள்ளை குறித்து நீதிமன்றத்தில் பல வழக்கு தொடுத்து இருக்கிறேன். வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிபிசிஐடியிலும் என் புகாருக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
காவல் துறையில் ஒரு சில அதிகாரிகளால் ஒட்டு மொத்த அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. என்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் இருப்பதால் கடந்த இரண்டரை வருடங்களாக நீதிமன்ற உத்தரவின்படி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த நிலை நீடிக்க கூடாது. நான் சாதாரண ஒரு விவசாயி. இந்திய நாட்டில் அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டும். இந்த நாட்டில் கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளை குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட எதிரிகளிடமே நான் சொன்ன செய்தியை கொண்டு சென்று விடுகிறார்கள்” என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், “ உயர் அதிகாரிகள் நேர்மையானவர்கள். ஆனால் அவர்கள் சொல்வதை கீழே இருக்கும் அதிகாரிகள் கேட்பதில்லை. முறப்பநாடு பகுதியில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடப்பதும் கஞ்சா பரவலாக விற்பனை நடப்பதும் உள்ளது. இதனை நானே பலமுறை தகவல் கொடுத்து பிடித்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவர்களை தண்டனை கொடுக்காமல் வெளியே விட்டு விடுகிறார்கள். இந்தப் பகுதி சேர்ந்த சிலரின் சிபாரிசு காரணமாக மணல் கொள்ளையர்கள் மீது சிறிய வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்படுகிறார்கள்.
எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது கஷ்டமாகத்தான் உள்ளது. ஒரு போலீஸ் அதிகாரியை எப்போதும் கூடவே அழைத்துக் கொண்டு சுதந்திர இந்தியாவில் ஒரு பாமரன், ஒரு விவசாயி சுதந்திரமாக அலைய முடியவில்லை. இதனால் கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனாலும் போலீஸ் இல்லாமல் என்னால் சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலையும் மணல் மாபியாக்களால் உள்ளது. தினமும் காலையில் எழுந்ததும் பால் மாடு இருக்கிறது. மாடுகளில் இருந்து பால் கறக்க வேண்டும்.
Also see...கர்நாடக சட்டமன்றத் தேர்தல்... திமுகவை ஃபாலோ செய்யும் காங்கிரஸ்..!
எந்த ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றாலும் போலீசை உடன் அழைத்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இது நீடிக்ககூடாது. எனக்கு விவசாயம் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் அங்கேயும் போலீசை அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் என்னோடு போலீசாரும் வயலுக்குள் இறங்கி பாதுகாப்பு அளிக்கின்றனர். ஆனால் இன்று வரை அவர்கள் பாதுகாப்பில் ஒரு குறை கிடையாது. ஆனாலும் இது நீடிக்க கூடாது சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறை கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளை முற்றிலுமாக தடுக்கப்பட்டு அமைதியாக வாழும் சூழல் ஏற்பட வேண்டும் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Farmer, Sand mafia, Thoothukodi