உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் பெண்கள் வீட்டு வேலைக்கு மட்டுமே சரியானவர்கள் என முடக்கி வைக்கப்பட்டனர். இந்த நிலை மாறி 1850 ஆம் ஆண்டுகளில் பெண்கள் தொழிற்சாலை, அலுவலகம் என வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்ல தொடங்கினர்.
ஆனால் அவர்களுக்கு தேவையான சம உரிமையும் சம நீதியும் மறுக்கப்பட்டது. பெண்களுக்கு சம உரிமையும் சம நீதியும் சமுதாயத்தில் கிடைக்க வேண்டும் என ரஷ்யாவில் 19ஆம் நூற்றாண்டில் பெரும் புரட்சி மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டை நினைவு கூறும் விதமாக,ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த தினத்தில் பெண்களை ஊக்கப்படுத்தவும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் பெண்கள் பெரும்பாலும் வெளியிடங்களுக்கு பணிக்குச் சென்றாலும் கிராமப்புறங்களில் பெண்கள் படித்து வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்வது பெரும் போராட்டத்திற்கு பிறகு தான் நிகழ்ந்து வருகிறது.
அதே சமயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வண்ணம்தான் உள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்களை பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. குழந்தை திருமணம், பாலியல் சீண்டல்கள், குடும்ப சிக்கல், குடும்ப பிரச்சனை, வரதட்சனை கொடுமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை பெண்கள் சந்தித்து வருகின்றனர்.
பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் :-
இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உஷா கூறுகையில், “தேனி மாவட்டத்தில் அதிகப்படியான குற்றச்செயல்கள் மகளிருக்கு எதிராக நடைபெறுவது அதிகரித்துள்ளன. வரதட்சனை கொடுமை, சிறார் காதல் , பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட பல வழக்குகள் பதியப்பட்டு தான் வருகின்றன. மகளிருக்கு எதிராக நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக பெண்கள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி இருப்பதால், குற்றச்செயல்கள் நடப்பதற்கு அவர்களே ஒரு காரணமாக உள்ளனர். தினசரி 15க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருகின்றன. காவல் நிலையத்திற்கு வராத பல குற்ற சம்பவங்களும் நடைபெறுவதுண்டு.
பெண்களுக்கு நடந்த அநீதி வெளியே தெரிந்தால் பெண்களுக்கு அவமானம் என்று பலரும் வெளியே சொல்லாமல் பல குற்றச் செயல்களை மறைக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. அதே சமயம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் செயல்களிலிருந்து பெண்கள் அவர்களை பாதுகாத்துக்கொள்ள காவல்துறையினர் வழங்கும் 1098 மற்றும்181 போன்ற அவசர உதவி எண்கள் பெரும் உதவியாக உள்ளன.
குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு தண்டனையும் வழங்கி வருகிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்”என்றார்.
இது குறித்து சமூக ஆர்வலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரான கவிதா கூறுகையில், “தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு முக்கியமாக உள்ளது. பெண்கள் இல்லாமல் பல துறைகள் இயங்குவது இல்லை. பெண்கள் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அவர்களுக்கான பாதுகாப்பை பெண்கள்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும் . தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றுதெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: International Women's Day, Local News, Theni, Women's Day