தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர்கள் பெருமாள் - செல்வி தம்பதி. விவசாயக் கூலித்தொழிலாளிகளான இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
கடந்த செவ்வாய் அன்று காலை வழக்கம்போல தோட்டத்தில் புல் அறுக்கும் வேலைக்கு சென்ற செல்வி இரவு வரை வீடு திரும்பவில்லை. தனது மனைவியை காணவில்லை என பெருமாள் பல இடங்களில் தேடி வந்த நிலையில், மறுநாள் வடபுதுப்பட்டியில் இருந்து கோம்பை கரடு செல்லும் தனியார் தோட்டத்தில் உடலில் ரத்தக் காயங்களுடன் செல்வி இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்து வந்த அல்லிநகரம் போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததில், பின்னந்தலையில் தாக்கப்பட்டு செல்வி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் காதுகள் அறுக்கப்பட்டு அவர் அணிந்திருந்த தோடு, தாலி என சுமார் ஒரு சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. செல்வியின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே கொலைக் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். தனது மனைவியின் மரணத்தில் அவருடன் வேலைக்கு செல்லும் சருத்துப்பட்டியை சேர்ந்த இருளப்பன் என்ற முதியவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் பெருமாள் புகார் அளித்தார்.
இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த அல்லிநகரம் போலீசார் இருளப்பனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கூலித்தொழிலாளியான இருளப்பனுக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வரும் நிலையில், இருளப்பனின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார்.
தனிமையில் வாழ்ந்து வரும் அவருக்கு, உடன் வேலைக்கு வந்த செல்வியுடன் கடந்த 4 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகி வந்தததை பார்த்த பெருமாள் இருவரையும் கண்டித்துள்ளார். இருளப்பன் உடல்நலக்குறைவால் பாதிப்படைய அவருடன் பழகுவதை செல்வி தவிர்த்து வந்துள்ளார். கணவனின் கண்டிப்பால் தொடர்ந்து அவரை விட்டு விலகியும் இருந்துள்ளார்.
இதனால் விரக்தியில் இருந்த இருளப்பன் சம்பவத்தன்று தோட்டத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்த செல்வியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் செல்வி அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருளப்பனை கைது செய்த அல்லிநகரம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : பழனிகுமார் (தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Extramarital affair, Illegal affair, Murder case, Tamil News, Theni