கல்லூரி பேராசிரியர் பதவி வாங்கித் தருவதாக கூறி, ரூ.33 லட்சம் மோசடியில் ஈடுபட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அமராவதி நகரைச் சேர்ந்தவர்கள் லதா - நாகேந்திரன் தம்பதியர். இருவரும் போடியில் உள்ள சி.பி.ஏ. கல்லூரியில் விரிவுரையாளராக தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ரவி (55) என்பவரின் அறிமுகம் நாகேந்திரனுக்கு ஏற்பட்டுள்ளது.
அப்போது கணித பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள நாகேந்திரனின் மனைவி லதாவிற்கு உசிலம்பட்டி அல்லது சிவகாசி ஆகிய பகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு கல்லூரியில் நிரந்தரமாக கணித பேராசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரவி ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
மேலும், மதுரை யாதவா கல்லூரி பேராசிரியராக பணிபுரியும் ரவியின் மகள் சபீதா மற்றும் மருமகனான மதுரை மெஜீரா கல்லூரி பேராசிரியர் விக்னேஷ்குமார் ஆகியோருடன் போடியில் உள்ள லதாவின் வீட்டிற்கு சென்ற ரவி, 28லட்சம் ரூபாய் கொடுத்தால் உறுதியாக கல்லூரி பேராசிரியர் வேலை வாங்கித் தருவதாக நம்பிக்கை வார்த்தைகள் கூறியுள்ளார்.
அதனை நம்பிய லதா, கடந்த 2017ஆம் ஆண்டு அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்கில் 28 லட்சத்தை செலுத்தியுள்ளார். ஆனால், பேசியபடி வேலை வாங்கித் தராமல் ரவி உள்ளிட்டோர் காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதையடுத்து தங்களது பணத்தை திரும்ப தருமாறு லதா - நாகேந்திரன் தம்பதியர் கேட்டதற்கு, மதுரையில் உள்ள தங்கள் சொத்தை விற்பனை செய்து பணத்தை தந்து விடுவதாகவும், தற்போது அந்த சொத்து அடமானத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதையும் வாசிக்க: இலவச மடிக்கணினி திட்டத்தை நிறுத்தவில்லை.. கட்டாயம் வழங்கப்படும் - மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்
எனவே, மேற்கொண்டு ரூபாய் 5லட்சம் பணம் கொடுத்தால் அடமானத்தில் உள்ள சொத்தை மீட்டு தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து விடுவதாக கூறியுள்ளனர். அதனையும் உண்மை என நம்பிய லதா நாகேந்திரன் தம்பதியினர் கூடுதலாக ரூபாய் 5லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால், அந்த பணத்தையும் பெற்றுக் கொண்ட ரவி உள்ளிட்டோர், தற்போது வரை வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட லதா மதுரையில் உள்ள தென் மண்டல காவல் துறை தலைவர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்திய தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், உசிலம்பட்டி கல்லூரி பேராசிரியர் ரவி மற்றும் அவரது மகள் சபீதா, மருமகன் விக்னேஷ் குமார் ஆகிய 3பேர் மீது வழக்குப் பதிந்து ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக மற்ற நபர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News