தேனி மாவட்டத்தில் அதிக பக்தர்கள் சென்று வழிபடும் புகழ் பெற்ற வழிவிடு முருகன் கோவில், கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு உள்ளதால் பூட்டிய கோவிலுக்கு வந்து பக்தர்கள் வழிபாடு நடத்தி செல்கின்றனர்.
முருகன் கோவில் :-
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் குமுளி மலைச்சாலையில் ஸ்ரீ வழிவிடும் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழக பகுதி மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இந்த முருகன் கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி மாதங்களில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிவர்.
சிறப்பு பூஜை :-
இந்த நிலையில், முருகனுக்கு உகந்த நாளான தை மாதத்தில், தைப்பூச தினத்தன்று இந்த வழிவிடும் முருகன் கோவிலில் அதிகளவிலான பக்தர்கள் வந்து வழிபடுவர். தைப்பூச தினத்தன்று இந்த கோவிலில் வழிபட்டால் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் ஐதீகம்.
இந்தநிலையில், தைப்பூசத்தன்று வழிபாட்டு தளங்களில் தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தைப்பூசம் தினத்தன்று மிகவும் புகழ்பெற்ற லோயர்கேம்பில் உள்ள ஸ்ரீ வழிவிடும் முருகன் கோவில் மூடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், பூட்டிய கோவிலில் வந்து முருகனை வழிபட்டு வருகின்றனர். மேலும் சிலர் பாதையாத்திரையாகவும் பால்குடம் எடுத்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சிலர் முடி காணிக்கை செலுத்தி முருகனை வழிபட்டு வருகின்றனர். பெரும் கூட்டத்துடன் தைப்பூசத்தன்று காணப்படும் முருகன் கோவில் இந்த ஆண்டு மூடப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் இருந்தாலும் ஆரவாரமின்றி அமைதியான முறையில் பக்தர்கள் வழிபட்டு சென்றனர் .
செய்தியாளர்: சுதர்ஸன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Murugan temple, Thaipusam, Theni