தேனி மாவட்டம் கூடலூர் அரசு மருத்துவமனை அருகே மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பாலம் கட்டும் பணிகள் காரணமாக வானங்கள் ஒரு வழித்தடத்தில் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு கூடலூர் பகுதியில் பெய்த
மழை காரணமாக சாலையோரத்தில் மண் சரிந்து உள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் கோயம்புத்தூரில் இருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த பேருந்தை ஜெயமங்கலத்தைச் சேர்ந்த 50 வயதாகும் ஓட்டுனரான பழனிச்சாமி இயக்கி வந்துள்ளார்.
கூடலூர் அரசு மருத்துவமனை அருகே சாலையோரத்தில் மண் சரிந்து இருப்பதை இரவு நேரத்தில் கவனிக்காமல் பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநரால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பேருந்து கவிழ்ந்தது குறித்து கூடலூர் காவல் நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பேருந்தில் 25க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் அனைவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் கூடலூர் பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க மாயி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கூடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.