முகப்பு /செய்தி /தேனி / தங்கை கணவரின் தூண்டுதல்... தங்கையையே வெட்டிக் கொன்ற அண்ணன்.. தேனியில் அதிர்ச்சி..!

தங்கை கணவரின் தூண்டுதல்... தங்கையையே வெட்டிக் கொன்ற அண்ணன்.. தேனியில் அதிர்ச்சி..!

செல்லப்பாண்டி - செல்லப்பிரியா - விமல்

செல்லப்பாண்டி - செல்லப்பிரியா - விமல்

தேனி மாவட்டத்தில் உடன்பிறந்த தங்கையை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த அண்ணன். உயிரிழந்த தங்கையின் கணவன், அண்ணன் இருவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த விமல் - செல்லப்பிரியா தம்பதியினர்.  இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், 1 பெண் குழந்தை என 3 பிள்ளைகள் உள்ளனர்.‌ கஞ்சா வழக்கில் தொடர்புடைய விமல் கடந்த 2 வருடங்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.‌ இதனால் அதே கிராமத்தில் தனது பிள்ளைகளுடன் செல்லப்பிரியா தனியே வசித்து வந்துள்ளார். பின்னர் கடந்த 4 மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து விமல் வெளியே வந்ததும் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

கஞ்சா வழக்கில் கைதாகி சிறை சென்று வந்தது தொடர்பாக தம்பதியர் இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல தம்பதியர் இடையே தகராறு முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த விமல், தனது மனைவி செல்லப்பிரியாவை செருப்பாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.‌ பின்னர் அதே ஊரில் வசித்து வரும் செல்லப்பிரியாவின் உடன் பிறந்த அண்ணனான செல்லப்பாண்டி(34)  உடன் இரு சக்கர வாகனத்தில் விமல் சென்றுள்ளார்.

இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய பிறகு இரவு நேரத்தில் போதையில் விமலின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தனது மனைவி செல்லப்பிரியாவிற்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடு அல்லது என்னுடன் கேரளாவிற்கு அனுப்பி வை, இல்லாவிட்டால் அவரை வெட்டிக் கொலை செய்து விடு என செல்லப்பாண்டியிடம் விமல் கூறியுள்ளார். அதன்படி தனது தங்கை செல்லப்பிரியாவிடம் ‘உன் கணவர் சொல்வதை கேட்டு அவருடன் சேர்ந்து கேரளாவிற்கு சென்று வாழு’மாறு செல்லப்பாண்டி கூறியுள்ளார்.

அதனை ஏற்க மறுத்த செல்லப்பிரியா, தனக்கு விமலுடன் சேர்ந்து வாழப்பிடிக்கவில்லை என்றும், உன் வேலையை மட்டும் பார்க்குமாறு தனது அண்ணனிடம் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி தனது தங்கை செல்லப்பிரியாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.‌ அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து பார்க்கையில், செல்லப்பிரியா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.‌

இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் வடக்கு காவல்துறையினர், அங்கிருந்த விமல் மற்றும் செல்லப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ இதனிடையே சம்பவ இடத்தில் உத்தமபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளர் மதுக்குமாரி தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.‌

இது தொடர்பாக உயிரிழந்த செல்லப்பிரியாவின் உறவினர் சிவப்பிரியா அளித்த புகாரில் கூடலூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின் கொலை செய்யப்பட்ட செல்லப்பிரியாவின் அண்ணன் செல்லப்பாண்டி, கணவர் விமல் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

தங்கை கணவரின் தூண்டுதலால்  உடன் பிறந்த தங்கையை அண்ணனே  வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர் : பழனிகுமார் (தேனி)

    First published:

    Tags: Crime News, Theni