மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்துசமய அறநிலைத்துறைக்கு கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவு விடவேண்டுமென இந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இது குறித்து தேனி மாவட்ட மக்கள் தங்களை கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
செல்போன் பயன்பாட்டிற்கு தடை :-
. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என திருச்செந்தூரைச் சேர்ந்த அர்ச்சகர் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோயில்களின் புனிதத்தையும் மாண்பையும் பாதுகாக்கும் பொருட்டு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள், பணியாளர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டுமென இந்து சமய அறநிலை துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : இன்று கார்த்திகை மாத பெளர்ணமி... சிவனை வணங்கினால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்குமாம்
மேலும், கோயில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்தும் தடை ஏற்கனவே ஒரு சில கோயில்கள் இருக்கும் நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்தும் கோயில் வளாகத்தில் செல்போன்களை வைக்க பாதுகாப்பு அறை ஏற்பாடு செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
பொதுமக்கள் கருத்து :-
கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து தேனி மாவட்ட மக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்ட மக்கள் கூறுகையில் ," கோயில்களுக்கு முழு பக்தியுடன் கடவுளை வணங்க செல்கிறோம். அந்த நேரத்தில் ஒரு சிலர் செல்போனை வைத்து போட்டோ எடுப்பதும் , சமூக வலைதளங்களில் வீடியோ போடுவதற்கு வீடியோ எடுப்பதும் கோயில்களில் சாமி கும்பிட வருபவர்களுக்கு இடையூறாக உள்ளது . கோயில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது வரவேற்கத்தக்க விஷயம் தான்.
ஒரு சிலர் மூலவரை படம் எடுப்பது பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை சங்கடப்படுத்துகிறது. ஒரு சிலர் கோயில்களை படம் எடுப்பது போல பெண்களை படம் எடுக்கும் சம்பவம் பல நேரங்களில் நடந்துள்ளது.
பக்தியுடன் கடவுளை வணங்கிக் கொண்டிருக்கும் பொழுது யாருடைய செல்போணாவது ஒலித்தால் அனைவரின் கவனமும் திசை மாறுகிறது . ஏற்கனவே திருப்பதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அனைத்து கோயில்களிலும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுவது வரவேற்கத்தக்க விஷயம் என்கின்றனர் தேனி மாவட்ட மக்கள். மேலும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள படி கோயில் வளாகத்தில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய ஆடை கட்டுப்பாடும் வரவேற்க வேண்டிய விஷயம் எனவும் தேனி மாவட்ட மக்கள் கூறுகின்றனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Theni