முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் 3 இடங்களில் நிலநடுக்கத்தை அளவிடும் நிலஅதிர்வு மானி கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆக்சலரோகிராப் கருவி அணையின் மேல் பகுதியிலும், அணை கேலரி பகுதியிலும் (சுரங்கப்பகுதி), அதுபோல் சீஸ்மோகிராப் கருவி பெரியாறு அணை கேம்பிலும் பொருத்தப்பட்டு உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை
தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள முல்லைப் பெரியாறு அணையில் நிலஅதிர்வு மாணி பொருத்தும் பணிக்கான பொருட்கள் அணைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதையடுத்து அணைப்பகுதியில் நிலஅதிர்வு மாணி பொருத்தும் பணி நடைபெறுகிறது. தென் தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய ஆதாரமாகவும் உள்ளது முல்லைப்பெரியாறு அணை.
இந்த அணை பலவீனமாக உள்ளது என கேரள அரசு குற்றம் சாட்டி வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் அணையின் உறுதித்தன்மை நிரூபிக்கப்பட்டது. அதன் பின்பும் கேரள அரசு தொடர்ந்து நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வால் அணைக்கு பாதிப்பு உள்ளது என கூறிவந்தது.
இதனால் முல்லைப் பெரியாறு அணையில் நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளை கண்காணிக்க நில அதிர்வுமாணிகள் பொருத்த கண்காணிப்பு குழுவை கேரளா வலியுறுத்தியது.
இதையடுத்து கடந்த ஜுன் மாதம் டெல்லியில் நடைபெற்ற மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையில் நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்துவது குறித்து கேரளாவின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜுன் இறுதியில் பெரியாறு அணையில் நில அதிர்வு மற்றும் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் மற்றும் ஆக்சலரோகிராப் கருவிகள் வாங்க ரூபாய் 99.95 லட்ச ரூபாய் நிதி தமிழக பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது.
கருவிகளை பொருத்தும் பணியை செய்து முடிக்க ஹைதராபாத்தைச் சேர்ந்த மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலைய (என்ஜிஆர்ஐ) விஞ்ஞானிகள் விஜயராகவன், சேகர் ஆகியோர் பெரியாறு அணையில் சீஸ்மோகிராப் மற்றும் ஆக்சலரோகிராப் கருவிகள் பொருத்துவதற்கான இடம் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், தற்போது முல்லை பெரியாறு அணையில் நிலஅதிர்வு மாணிகள் மற்றும் அளவை பொருத்தும் பணிக்கான மராமத்து பொருட்களை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவிசெயற்பொறியாளர் குமார், உதவிப்பொறியாளர் ராஜகோபால் அணைக்கு கொண்டு சென்றனர்.
அவர்களுடன் என்ஜிஆர்ஐ விஞ்ஞானி சேகர் உடன் சென்றுள்ளார்.
சீனியர் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் அணைப்பகுதியில் 3 இடங்களில் நிலஅதிர்வு மாணி பொருத்தப்பட்டது.
ஆக்சலரோகிராப் கருவி, அணையின் மேல் பகுதியிலும், அணை கேலரி பகுதியிலும் (சுரங்கப்பகுதி), அதுபோல் சீஸ்மோகிராப் கருவி பெரியாறு அணை கேம்பிலும் பொருத்தப்பட்டு உள்ளது.
கம்பத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni