தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும் கைவினை கலைஞர்கள் அதிகம் உள்ள மாவட்டமாகவும் தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. தஞ்சை மாவட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக கும்பகோணம் திகழ்கிறது. மேலும் இந்த ஊர் கடந்த 1868ம் ஆண்டு கும்பகோணம் ஜில்லாவாக இருந்ததற்கு சான்றுகள் உள்ளன.
அனைத்து வசதிகளும் உள்ளன
மேலும் கோயில் நகரமாகவும் திகழ்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி, தென்னகத்தின் கேம் பிரிட்ஜ் என்றழைக்கப்படும் அரசு கல்லூரி, நவக்கிரஹ கோயில்கள், புராதன சின்னங்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசி மகாமகம் உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற விழாக்கள் மற்றும் வர்த்தகம், பாரம்பரியம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
இதேபோல் பெரும்பாலான அரசுத்துறை தலைமை அலுவலகங்களும், பல்வேறு தனியார் வங்கிகளின் தலைமை யிடமாகவும், தினந்தோறும் வெளிநாட்டினர், வெளி மாநிலத்தவர்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இங்கு கணித மேதை ராமானுஜம், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் பல தலைவர்கள், அறிஞர்கள் பிறந்த பகுதியாகும்.
25 ஆண்டு கால போராட்டங்கள்
முக்கியமாக தஞ்சை மாவட்டத்திற்கு தலைமை குற்றவியல் நீதிமன்றமே கும்பகோணத்தில் தான் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புப் பெற்ற கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது அந்த பகுதிகளில் வாழும் மக்களின் 25 ஆண்டு கால போராட்டங்கள் நிறைந்த கோரிக்கையாக இருந்தது வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அமைப்போம் என வாக்குறுதியை அளித்திருந்தார். அதேபோல் கடந்த ஜனவரி மாதம் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தஞ்சை மாவட்டத்திலிருந்து கும்பகோணத்தை பிரித்து புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். தஞ்சை மாவட்டத்திலிருந்து கும்பகோணத்தை தனி மாவட்டமாக அமைய வாய்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் கும்பகோணம் மாவட்டமாக பிரித்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பற்றி பல பார்போம்.
தவிர்க்க முடியாத ஒரு வளர்ச்சி
இதுகுறித்து தஞ்சை வழக்கறிஞர் ஜீவானந்தம் அளித்த பேட்டியில், “மாற்றம் என்பதும் வளர்ச்சி என்பதும் தற்போதைய காலத்தில் தவிற்க முடியாததாகும், ஏற்கனவே தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவை தஞ்சை மாவட்டமாக செயல்பட்டு வந்தது.
இதையும் படிங்க : கோவையில் தயாராகும் ‘வஞ்சகன்’.. புதிய படத்துக்கு போட்டாச்சு பூஜை..
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, மற்றும் கந்தர்வகோட்டையும் ஏற்கனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் இருந்தது. இதுபோன்ற பல மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளது. எனவே மாவட்ட பிரிவினை என்பது தவிர்க்க முடியாத ஒரு வளர்ச்சி ஆகும்.
அரசு அலுவலகங்கள் அமையும்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அணைக்கரை போன்ற பகுதிகள் சுமார் 75 கிலோ மீட்டர் பயணம் செய்து தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. முக்கியமாக மாவட்டமாக பிரிந்தால் கும்பகோணத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமையும் இதனால் அங்குள்ள மக்கள் எளிதில் அதிகாரிகளை பார்க்க முடியும், புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் (Sp office) அமையும்.
தனி ஒரு ஆர்டிஓ அலுவலகம் அமையும். தற்போது கும்பகோணத்திற்கு ஒதுக்கப்படும் நிதி உயரும். தஞ்சை மாவட்டத்திற்கும் கும்பகோணத்திற்கும் தனித்தனியான சலுகைகள் கிடைக்கும். முக்கியமாக வேளாண்மை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இதுவரையில் கிடைத்த நிதியை விட தற்போது சற்று அதிகமாகவே கிடைக்கும். இதுபோன்ற பல்வேறு துறைகளில் பல்வேறு தொழில் செய்பவர்களுக்கும் மாவட்டம் ரீதியாகவும் தனித்தனியான நிதிகள் கிடைக்கும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனால் பொதுமக்கள் எளிதில் பயன்பெறுவர் மேலும் மாவட்ட வளர்ச்சியும் ஏற்படும்.. கும்பகோணத்திற்கு புதுப்புது பாலங்கள் உருவாக்கப்படும். ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் தலைமை இடமாக செயல்பட்டு தான் மேலும் வந்துள்ளது. அதற்கு முழு தகுதியும் உள்ள ஊர் தான். ஆன்மீகம் ஆத்திகம் நாத்திகம் தழைத்த பூமியாக கும்பகோணம் இருந்துள்ளது இருந்தும் வருகிறது.
முக்கிய கோவில்கள் உள்ளது
முக்கியமாக கோவில் நகரம் தஞ்சை மாவட்டத்தில் பெரிய கோவிலை தவிர்த்து முக்கிய கோவில்கள் அனைத்தும் கும்பகோணத்தில் தான் அமைந்துள்ளது. மன்னர்கள் ஆண்ட பூமியாகவும் போர்கள் அதிகம் நடந்த பகுதியாகவும் முக்கியமாக பழைய யாரையும் அங்கு தான் அமைந்துள்ளது. எனவே நிர்வாக பிரிவினை என்பது மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான சேவையாகும்.
நிதி பற்றாக்குறை
ஆனால் இதற்கு அரசு எத்தனை ஆண்டுகள் காலம் தாழ்த்துவதின் முக்கிய காரணம் நிதி பற்றாக்குறை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. (உதாரணத்திற்கு ஒரு இட்லியை 2 பேர் பங்கு வைத்து வந்த நிலையில் தற்போது 2 பேருக்கும் தனித்தனி இட்லி கிடைக்கும். அதேபோல் தான் தஞ்சையில் இருந்து கும்பகோணம் பிரிந்தால் ஏற்படும் இது எல்லாம் மக்கள் நலனுக்கே” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore