தஞ்சாவூர் - திருச்சி சாலையில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் பிள்ளையார் பட்டி ஊராட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிழற்குடையானது பார்ப்பதற்கு மிக அழகாகவும் 50 பேருக்கு மேல் கூட நிற்கும் அளவிற்கு பெரியதாக இருக்கிறது.
இது நாள் வரையும் இந்த பயணிகள் குடை சேதமடையாமல் பளபளப்பாக இருக்கிறது. ஆனால் இந்தப் பயணியர் நிழற்குடையில் பொதுமக்கள் நின்று பயணம் செய்வதில்லை. காரணம் இது இன்னும் திறக்கப்படவில்லை. இங்கு பேருந்துகளும் நிற்காது.
இந்த பயணியர் நிழற்குடையில் இருந்து 200 மீட்டர் தள்ளி மாவட்ட ஆட்சியரின் வளாகத்திற்கு மிக அருகிலேயே உள்ள தற்காலிக சிறிய அளவிலான ஃபிளக்ஸ் சீட் அமைத்த பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.இதில் 10 பேர் கூட நிற்க முடியாத அளவில் இருக்கிறது. வெயில், மழைகாலங்களில் அதில் நின்று தான் பேருந்துக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் பொதுமக்கள் அதிகமாக வரும் இடமாக இருப்பதால் பலர் இடப்பற்றாக்குறையால் வெயில், மழையில் நின்று காத்திருக்கின்றனர். ஏற்கனவே பொதுமக்கள் வெளியூர்களில் இருந்து பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அங்கு பல மணி நேரம் காத்திருந்து அவர்கள் கோரிக்கைகளை, வேலைகளையும் முடித்து பேருந்துக்காக காத்திருக்கும் போது இப்படி ஒரு அவலம் ஏற்பட்டு வருகிறது.
முக்கியமாக இதில் பல பேருந்துகள் அலுவலகம் முன்பு நிற்பதில்லை. ஒரு சில பேருந்துகள் மட்டுமே நிற்கிறது. வெகு நேரம் பொதுமக்கள் காத்திருந்து காத்திருந்து மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். பயணியர் நிழற்குடை அமைக்கப்படாமல் இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஏற்கனவே அமைத்திருந்ததும் கூட இதுவரையில் திறக்கப்படாததால் அது அமைத்தும் பயனற்றதாகவே இருக்கிறது. அதற்கான கட்டுமான செலவு 15 லட்ச ரூபாயும் பயனற்றதாகவேஆக தான் போகிறது.
2016-ல் கட்டப்பட்ட அந்த பயணியர் நிழற்குடையில் பேருந்துகளை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் தற்காலிக பயனியர் நிழற்குடை இருக்கும் இடத்தில் பெரியதாக ஒரு பயணிகள் நிழற் குடை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: ஆனந்த் - தஞ்சாவூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Tanjore, Thanjavur