தஞ்சையின் தென் பகுதியில் உள்ள கோட்டை தெருவில் அமைந்துள்ளது அகத்தீஸ்வரர் கோயில். அகத்திய மாமுனிவர்கள் வழிபட்ட திருத்தலங்களில் ஒன்றாக இந்த கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பை இச்சிறப்பு தொகுப்பில் காணலாம்.
மன கவலை தீரும் :
இன்றைய நவீன உலகில் பெரும்பாலானவர்கள் மனக்கவலை எனும் மாயவலையில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களின் துன்பம் நீக்கி, தூய மன ஓட்டத்தை ஏற்படுத்தி மனக்கவலைகளை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவராக கோனூர் நாடு அகத்தீஸ்வரர் விளங்குகிறார்.
கோயிலில் இறைவன் அகத்தீஸ்வரர், சதுர வடிவ ஆவுடையார் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது தனி சிறப்பு. சித்தர்கள் வழிபட்ட கோவில்களில் தான் இத்தகைய அமைப்பில் சிவன் காட்சி அளித்ததாக வரலாறு உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவி பெரிய நாயகி தெற்கு நோக்கியும் காட்சி அளிக்கிறார்.
இங்கு பெரியநாயகி உடனாகிய அகத்தீஸ்வரராக இறைவன் இருக்கிறார். இதன்காரணமாக பெரியநாயகி பெண்களின் மன உறுதியை மேம்பட செய்யும் தனி பண்பை தன்னகத்தை கொண்டுள்ளாள். தனது சன்னதி முன்பு மனசுமையோடு வந்து கண்ணீர் மல்க வேண்டும் பெண் பக்தர்களின் கவலை போக்கும் தாய் உள்ளத்தோடு பெரியநாயகி வீற்றிருந்து அருள்புரிகிறாள்.
திருமண தடை, கல்வி செல்வம் என வேண்டியோருக்கு வேண்டும் வரங்களை அளித்து வருகிறார் அகத்தீஸ்வரர். கோனகர் நாட்டை சேர்ந்த 18 கிராம மக்கள் மட்டுமே இக்கோவிலில்வழிபட்டு வந்த நிலையில் தற்போது வெளி ஊர்கள்,வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் இக்கோயிலில் வழிபட்டு வருகின்றனர்.
திருமணத் தடை நீங்கும்,குழந்தை பாக்கியம் கிட்டும் :
அடியவர்க்கு எல்லாம் எளியவராய் நின்று அருள்பாலிக்கும் அகத்தீஸ்வரர், வலதுபுறம் வளவன்ட அய்யனார்கோவிலுக்கும், இடதுபுறம் மகாமாரியம்மன் கோவிலுக்கும் மத்தியில் அகிலத்தையே காக்கும் அகத்தீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார். இக்கோவிலில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டின் போது நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.
திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 21 பிரதோஷத நாட்களில் தொடர்ச்சியாக வந்து நந்தியம்பெருமான், ஈசன், அம்பாளை வழிபாட்டால் திருமணயோகம் கிட்டும்,குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி ஈசன், அம்பாள், நந்தியெம்பெருமானை ஒரே இடத்தில் நின்று வழிபடும் வகையில் சன்னதி அமையபெற்றுள்ளது இக்கோவிலின் மேலும் ஒரு தனிசிறப்பு.
கடன் தொல்லை, தீராத நோய்கள் நீங்க :
அதுமட்டுமின்றி தீராத கடன் தொல்லை உள்ளவர்கள் கோனூர்நாடு அகத்தீஸ்வரரை 21 திங்கட் கிழமை தொடர்ச்சியாக அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கி, சகல யோகமிக்க பெருவாழ்வு கிடைக்க அருள்புரிவார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சிறப்பு வழிபாடு :
இக்கோவில்களில் நடைபெறும் கார்த்திகை மாத சோமவார பூஜைகள், பிரதோஷம், மகாஅன்னாபிஷேகம், மகாசங்காபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், தேய்பிறை அஷ்டமி, குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு,கேது பெயர்ச்சி, ருத்ராட்சமாலை பந்தல் தரிசனம் போன்றவற்றில் கலந்து கொண்டு வழிபட்டால் நன்மைகள் கிட்டும்.
ருத்ராட்ச பந்தல் :
சிவபெருமானின் கண்ணீரே ருத்ராட்சத்தின் தோற்றம் என சிவபுராணம் சொல்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த 5 ஆயிரம் ருத்ராட்சங்களால் அகத்தீஸ்வரர் கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவன், பெரியநாயகி அம்பாள் சன்னதிகளில் பொருத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் : ஆனந்த் - தஞ்சாவூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore