திருவாதிரை திருவிழாவின் 4வது நாளான இன்று 63 நாயன்மார்களுக்கு கோமதி அம்பிகை சமேத ஸ்ரீசங்கரலிங்க பெருமான் காட்சியளித்த பின்னர் வீதி உலா நடைபெற்றது.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவாதிரை திருவிழா சங்கரநாராயணன் கோவிலில் விமர்சையாக நடைபெறும்.
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நாளாகும். அன்று சிவபெருமானை வேண்டினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகளும் தந்த பல்லக்கில் சுவாமி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறும். திருவாசகம் திருமறை போன்றவற்றை பாடி புகழ்பெற்ற மாணிக்கவாசகர் திருவாதிரை திருவிழாவில் எழுந்தருள்வது வழக்கம்.
இந்த ஆண்டும் அதேபோல் மாணிக்கவாசகர் எழுந்தருளினார். சுவாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகர் எழுந்தருளிய சப்பரங்களுக்கு தீபாராதனைகள் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. திருவாதிரை திருவிழாவில் தொடர்ந்து 4வது நாளான இன்று 63 நாயன்மார்களுக்கு சுவாமி அம்பாள் காட்சி கொடுத்த திருக்கயிலாய காட்சியும் நடைபெற்றது.
63 நாயன்மார்கள் இரு சப்பரங்களில் எழுந்தருளினர். மேலும் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் ஆகியோர் ஒரு சப்பரத்திலும் மாணிக்கவாசகர் தனிசப்ரத்திலும் எழுந்தருளினர். மாணிக்கவாசகருக்கு 21 தேவாரங்கள் பாடப்பட்டு சங்குகள் முழங்கப்பட்ட பின்பு தீபாராதனை செய்யப்பட்டு சப்பரங்கள் கோவிலுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டது.
63 நாயன்மார்களின் சப்பரங்கள் கோவிலுக்கு வெளியே எடுத்துச் சென்ற பிறகு சங்கரநாராயணர் திருக்கோயில் கதவுகள் மூடப்பட்டு பின்பு திறக்கும்போது தீபாராதனைகள் சங்கர நாராயணன் மற்றும் கோமதி அம்மன் சுவாமிக்கு செய்யப்பட்டன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்பு சுவாமி மற்றும் அம்பாள் இருக்கும் சப்பரங்களுக்கு தீபாரதனைகள் செய்த பின்னர் கோவிலுக்கு வெளியே ரத வீதிகளில் வீதி உலா வரும். மேலும் சங்கரநாராயணன் திருக்கோவிலில் கோமதி யானைக்கு பூ அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலாவில் கலந்து கொண்டது. திருவாதிரை திருவிழாவைமுன்னிட்டு ஏராளமான சிறுவர் சிறுமியர் பரதநாட்டியஅரங்கேற்றம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து வரவிருக்கும் நாட்களில் சுவாமி அம்பாளுக்கு ஊடல் உற்சவம் நடைபெறும். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடராஜர் பரிவட்டம் இறக்கம் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெறும்.இதைத் தொடர்ந்து நடராஜர் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் பச்சை சாத்தி அலங்காரத்திலும் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதைத்தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வு ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி அதைத்தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு 10 நாட்களில் ஒவ்வொரு நிகழ்வும் வெகு விமர்சையாக நடைபெறும்என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi