தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புகழ்பெற்ற தென் திருவண்ணாமலை அண்ணாமலையார் உடனுறை உண்ணாமலையம்பாள் கோவில் அமைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா ஆயால்பட்டி கிராமத்தில் கிறிஸ்தவ குடும்பத்தில் 7வது குழந்தையாக பிறந்தவர் தான் பெரியசாமி சித்தர், அவரது சகோதரர்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்ற இவர் மட்டும் இந்து மதத்தின் ஈர்ப்பால் இந்து மதத்தை தழுவினார்.
அதனால் பிரிட்டிஷ்காரர்களும், அந்த ஊர்மக்களும் இவரை அங்கே வசிக்க விடாமல் துரத்தினர். பின்னர் பெரியசாமி சித்தர் சிவன் மீது கொண்ட அதிக பற்றினால் திருவண்ணாமலை சென்றடைந்தார். அங்கு அவர் சிவனை வழிபட்டு தியானத்தில் இருந்தபோது, சிவன் பெரியசாமி சித்தர் முன் தோன்றி ”என் புகழை தென் தமிழகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” என்று கூறினார். இதனால் மலையே சிவனாக இருக்க கூடிய திருவண்ணாமலையில் இருந்து மண் எடுத்து வந்து தென் தமிழகத்திற்கு அடைந்தார்.
பின்னர் சிவனின் புகழை எடுத்துரைக்க திருநெல்வேலி வந்தடைந்தார். அங்கு பிரிட்டிஷ்காரர்களின் கொடுமையால் அங்கே இருக்க முடியாமல் சொந்த கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனவடலி சத்திரம் என்ற கிராமத்திற்கு வந்தடைந்தார். அங்கேயும் அவர் துரத்தப்பட்டார். இதனால் அங்கு இருந்து அவர் வரும்போது மலை அடிவாரத்தில் ஒரு கிராமம் தென்பட்டது. அங்கு சென்று அந்த மலையை பார்க்கும்போது திருவண்ணாமலை போல் தோன்றியதால் அந்த கிராமத்தில் சிவனுக்கு ஒரு கோவில் எழுப்பி அந்த ஊர் மக்களுடன் ஒன்றாக வழிபட்டு வந்ததாக செவிவழிச்செய்திகள் கூறுகின்றன.
மேலும், இங்குள்ள மலையில் வருடத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை நாளன்று 3200 அடி உயரத்தில் அதாவது மலையின் உச்சியில் மிக பிரமாண்டமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அங்கே 7 கன்னி தெய்வங்களுக்கு பூஜை செய்யப்படும் , பிறகு அடிவாரம் அமைத்திருக்க கூடிய அண்ணாமலையார் உடனுறை உண்ணாமலை அம்பாள் கோவிலில் தேர் திருவிழா நடைபெறும். பெரியசாமி சித்தர் திருவிழாவின்போது தலையில் தீபம் ஏற்றி அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று யாசகம் பெற்று வந்தாராம். அப்படி ஒருநாள் பெரியசாமி சித்தர் தலையில் தீபம் ஏற்றி யாசகம் பெற அருகில் உள்ள கிராமம் சென்றைடைந்தார்.
அவரை திருடர் என நினைத்து அவரை கட்டி வைத்து தீயிட்டு எரித்தனர். அப்போது தீ அவரை தீண்டவில்லை. மாறாக அவரது தலை மீது உள்ள தீபம் மட்டுமே வழக்கம்போல் எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆச்சர்யம் அடைந்த ஊர் பொதுமக்கள் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கூறி யாசகம் கொடுத்து அனுப்பி வைத்தனர். பிறகு சிறிது காலம் கழித்து சிவனின் திருவிளையாடல் போல் ஒரு சம்பவம் நடைபெற்றதாம். பெரியசாமி சித்தர் தூங்கி கொண்டிருக்கும்போது 4 குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருட முற்பட்டார்கள். அதை கண்ட சித்தர் ஓம் நமசிவாய என்று கூறிய உடன் அவர்களுக்கு பார்வை இழந்து அப்படியே அமர்ந்து விட்டார்களாம்.
காலையில் ஊர் பொதுமக்கள் வரும்போது சித்தர் எழுந்து அவர்களுக்கு பார்வை வர செய்து என் காலத்திற்கு அப்பறம் உங்கள் தலைமுறையினர் தான் அண்ணாமலையார் கோவிலின் திருப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினாராம். அப்போது இருந்து அவர்கள் தலைமுறையினரை கோவிலில் பூஜை செய்து வருகின்றார்கள். ஊரில் மழை இல்லையென்று மக்கள் வேண்டினால் பெரியசாமி சித்தர் பூஜையின் மழை வர செய்வார் என பக்தர்களால் நம்பப்படுகிறது. அருகில் உள்ள 18 கிராமங்களும் பெரியசாமி சித்தர் கூறியது போல இந்த மலை திருவண்ணாமலை போல் காட்சி அளிப்பதால் இந்த ஊருக்கு அண்ணாமலைபுதூரை என்றும் தென் திருவண்ணாமலை என்று அழைக்கிறார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கோவிலின் வலதுபுறத்தில் பெரியசாமி சித்தரின் ஜீவசமாதி உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தென் திருவண்ணாமலை என்று அழைக்க கூடிய அண்ணாமலைபுதூர் வந்து அண்ணாமலையார் உடனுறை உண்ணாமலை அம்பாள் கோயிலை தரிசனம் செய்ய தவறுவதில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi