தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மையினர் சிறுதொழில் செய்ய கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனி நபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, ஜவுளி கடை, நாட்டு சர்க்கரை தயாரித்தல், பெட்டிக்கடை, சில்லரை வணிகம், கைவினைத் தொழில் மற்றும் மரபு வழிச் சார்ந்த தொழில்கள் போன்ற சிறு தொழில்களுக்கு திட்டம் 1-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
திட்டம் 2-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-இன் கீழ் தனி நபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000/-மும், திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிக பட்ச கடனாக ரூ.10,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது.
சுயஉதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. 2022-23-ம் நிதியாண்டிற்கு கடன் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்ற ரூ.3,00,00,000 - இல் நாளது தேதி வரை கடன் வழங்கப்பட்டது போக மீதம் ரூ.2,41,85,000 உள்ளது.
எனவே, தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விபரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஆவணங்களின் ஒளிப்பட நகல்களை சம்மந்தப்பட்ட கூட்டுறவு வங்கி அல்லது தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அலுவலக நாட்களில், அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi