முகப்பு /தென்காசி /

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்களுக்கு அரசு விருது - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்களுக்கு அரசு விருது - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கலைஞர்களுக்கு விருது

கலைஞர்களுக்கு விருது

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந் 15 கலைஞர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 15 கலைஞர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழ் நாட்டின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-2003ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.

கலை விருதுகள், கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் தென்காசி மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக, தென்காசி மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் தலா ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிசந்திரன் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்படவுள்ளது. ஆகவே, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் இந்த விருதுக்காக விண்ணப்பிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதுகளும், 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதுகளும், 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி விருதுகளும், 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதுகளும், 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருது வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். பதினைந்து சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். மேலும், தென்காசி மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.

மேலும், கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போது புதியதாக விண்ணப்பம் கண்டிப்பாக அனுப்பவேண்டும்.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச்சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) கீழ்க்கண்ட முகவரிக்கு செய்தி வெளியிடப்பட்ட நாளிலிருந்து 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் “ஆ” குடியிருப்பு, (தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில்) திருநெல்வேலி - 7. தொலைபேசி எண்:0462-2901890

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Tenkasi