தென்காசி மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்களுக்கு 2022ம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தனியார் பொதுத்துறை / கூட்டுத் துறை நிறுவனங்களைச் சார்ந்த தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக. தமிழ்நாட்டில் பல்வேறு சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் பாராட்டத்தக்க வகையில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் விருது வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, இவ்விருதானது 2022ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையும், நற்சான்றிதழும் கொண்ட இவ்விருது ஒவ்வொரு வருடமும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணிசெய்த தலைசிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
என்னென்ன தகுதிகள் வேண்டும்?
பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நிறுவனங்கள் அரசு/ அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இவ்விருதினைப் பெற விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனங்கள் நேரடியாகவோ, தங்களின் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தங்களது இதர முகமைகள் மூலமாகவோ செயலாற்றலாம். தனித்துவமான அறக்கட்டணைகள் / தொண்டு நிறுவனங்கள் மற்றும் மன்றங்கள் சங்கங்கள் இவ்விருது பெற தகுதியற்றவை ஆகும்.
நிறுவனங்களால் ஊரகப் பகுதிகளில் அந்தந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே விருது வழங்குவதற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும். விவசாயம், கால்நடை கல்வி பொதுச் சுகாதாரம், குடிநீர், மழைநீர் சேகரிப்பு, மரபு சாரா எரிசக்தி, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல். சுய உதவிக் குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு பெண்கள் குழந்தைகள் இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் சிறப்பாக பங்கேற்கும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும்.
மேலும், பல்வேறு சமூக நல மேம்பாட்டுப் பணிகளும் விருது வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும். நிறுவனங்களின் கடந்த ஒரு நிதி ஆண்டின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இவ்விருதுக்கு விண்ணப்பிக்க தேவையான விண்ணப்பம் Www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் செயல்பாட்டு நிலையில் உள்ளது. எனவே, தகுதிவாய்ந்த நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை இணையதள வழி மட்டுமே தகுந்த ஆவணங்களுடன் இணையதளத்தில் 15.02.2023-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பான இவ்விருதினைப் பெற தகுதியான தொழில் சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் விண்ணப்பம் செய்ய முன்வரவேண்டும்” என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi