தற்போது உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட கணினி முறையில் இயங்கும் அனைத்து செயல்பாடுகளுமே செயற்கை நுண்ணறிவின் மூலம் செயல்படுமாறு மாற்றம் செய்ய அனைவரும் முயற்சி செய்து வருகின்றனர். சிலர் இதற்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் பேசி வரும் நிலையில் சமீபத்தில் சுந்தர் பிச்சை அளித்த நேர்காணலில் இதைப் பற்றிய தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், “செயற்கை நுண்ணறிவானது மிகச் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் அது அனைவருக்கும் நன்மை தரக்கூடிய விதத்தில் அமையும்.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில் ஏதேனும் தவறு செய்யும் பட்சத்தில் அது மிகப்பெரும் ஆபத்துகளை ஏற்படுத்த கூடும். இதைப் பற்றி நமக்கு முழு புரிதல் இல்லை என்றாலும் கூட இந்த தொழில்நுட்பமானது அதிவேகமாக வளர்ந்து வருவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் தற்போது மென்பொருள் துறையில் நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டியை பற்றியும் அவர் பேசியுள்ளார். நிறுவனங்கள் அனைத்தும் தங்களுக்குள் உள்ள போட்டி மனப்பான்மையை நிரூபிப்பதற்காகவும், அனைவரும் ஒருவரை முந்தி ஒருவர் செல்வதற்காகவும் மிக வேகமாக செயற்கை நுண்ணறிவில் தங்களுடைய கவனத்தை செலுத்தி வருகின்றனர். யார் முதலில் தங்களது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது என்பதில் மிகப்பெரிய போட்டி நிலவுகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் உலக அளவில் தற்போது பேசு பொருளாகியுள்ள சாட் ஜிபிடி எனப்படும் ஓபன் ஏஐ நிறுவனத்தை பற்றி அவரிடம் கேட்டதற்கு நேரடியாக அந்த செயற்கை நுண்ணறிவையோ, அந்த நிறுவனத்தையோ அவர் குறை கூறவில்லை. ஆனால் “மற்றவர்கள் இது போன்ற மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதற்கு தற்போது நமது சமுதாயமானது தயாராக இருக்கிறதா என்பதை பற்றி சந்தேகம் கொண்டிருக்கிறார்கள் என்றும், இதற்கு தயாராக சிறிது காலம் எடுக்கலாம்” என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் “சில பொறுப்புள்ள மனிதர்கள் இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு நன்மை அளிக்கும் வகையில் பயன்படுத்தலாம் என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக சுந்தர் பிச்சை இவ்வாறு கூறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்காவின் நீதித்துறையில் இருந்து “சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்பங்கள் சில வருடங்கள் முன்னதாகவே நமக்கு கிடைத்திருக்கும். ஆனால் கூகுள் போன்ற நிறுவனங்கள் ஒற்றை ஆட்சி முறையை நடத்தி அவ்வாறு ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதை தடுத்து விட்டன” என்று கூறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது கூகுள் நிறுவனத்தின் மீது இரண்டு நம்பிக்கைக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்ச் எஞ்சின் தொடர்பாக கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் பனிப்போர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. அதில் மைக்ரோசாப்ட் ஆனது ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு தனது ஆதரவை அளித்து அதனை காப்பாற்றியுள்ளது. என்னதான் செயற்கை நுண்ணறிவை குற்றம் சாட்டினாலும் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய இரண்டு பெரு நிறுவனங்களுமே தங்களது செயற்கை நுண்ணறிவை விரைவில் அமல்படுத்துவதற்கு தயாராகி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google, Sundar pichai