தமிழ்நாட்டை சேர்ந்த அறிவார்ந்த மக்களுக்கு திராவிட மாடல் என்னவென்று புரியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தயாரிக்கப்பட்ட "ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி" என்ற சாதனை மலரை வெளியிட்டார். ஈராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்தார். 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள், சட்டமன்ற பேரவையில் ஆற்றிய உரைகள், ஈராண்டு சாதனைகளை விளக்கும் காணொலி ஆகியவற்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய பயன்கள் வழங்கி, புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களின் கீழ் ஆணைகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்பது கடந்த 2 ஆண்டு காலமாக, ஏழை மக்களின் நலன் காக்கும் குடியிருப்பாக மாறி உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இந்த ஆட்சியின் முகம் என்பது அதிகாரம் அல்ல, அன்பு நிறைந்தது என்றார். இந்த ஆட்சியின் முகம் சனாதானம் அல்ல, சமூக நீதி என்றும் குறிப்பிட்டார். ஜாதி, மதத்தால் மக்களை பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மடல் என்றால் புரியாது என்றும் தமிழ்நாட்டை சேர்ந்த அறிவார்ந்த மக்களுக்கு திராவிட மாடல் என்னவென்று புரியும் என்றும் முதலமைச்சர் கட்டமாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 8 கோடி மக்களுக்கு ஏதாவது ஒரு நன்மை கிடைத்துள்ளது. பெண்கள் குழந்தைகள், பள்ளி மாணவர்கள்ம் கல்லூரி மாணவிகள், விவசாயிகள் என அனைவருக்கும் பலன் கிடைத்துள்ளது. கீழ்நிலையில் உள்ள மக்களை கை தூக்கிவிடுகிற அரசுதான் எங்களது அரசு என பேசிய முதலமைச்சர் பெரியார், அண்ணா, கருணாநிதியை என் நெஞ்சில் ஏற்றி பணியாற்றி வருகிறேன் என்றார்.
என்னால் முடிந்த அளவிற்கு ஓய்வின்றி சக்திக்கு மீறி பணியாற்றி வருகிறேன். தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்ல என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன் என்றும் திமுகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருக்கும் நன்மை செய்து வருவதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் சீரழிந்த அரசு நிர்வாகத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இருண்ட தமிழ்நாட்டில் விடியல் உண்டாக்கப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். மக்களின் ஆதரவோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் திமுக ஆட்சி தொடரும் என்று முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் மக்களின் ஆதரவோடு அன்போடு முதலமைச்சராக பதவியேற்றேன் என்றும் புதிய முதலீடு மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு ஆண்டு சாதனை நிகழ்ச்சியில் பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, DMK