சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 26 புதிய அறிவிப்புகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர், 2 ஆயிரத்து 996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 175 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டில் இரண்டாவது கட்டமாக 150 கோடி ரூபாய் மதிப்பில் 7 ஆயிரத்து 500 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரி பள்ளி என்ற அடிப்படையில், வரும் ஆண்டு 13 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் உருவாக்க 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கில் 10 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார். அத்துடன், 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில அளவிலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக 9 கோடி ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விளையாட்டு சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
Also Read : சுங்கச்சாவடி கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு.. அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்?
10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் எனவும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்பாகச் செயல்படுத்த 8 கோடி ரூபாய்க்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படும்,
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பணியில் சேர்வதற்கு முன்பு 15 நாட்கள் கற்றல் கற்பித்தல் மற்றும் அடிப்படை நிர்வாகப் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக, வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகள் இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிப்படியாக மூன்றாம் பாடப்பிரிவு உருவாக்குவதுடன், இணையதளத்தில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை மாணவர்கள் கண்டறியும் வகையில் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.