விஷச்சாராயம், கஞ்சா போன்ற விஷயங்களை முதலமைச்சர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடைசி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், வன்னியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ’விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் மே 17 இனப்படுகொலை பெரும் துயர நாள் அனுசரிக்கப்படும். மே 18 இலங்கை போர் முடிந்ததற்கான அறிவிப்பு நாளாகும். இலங்கை போர் முடிந்து 14 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் இதுவரை குற்றவாளிகள் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படவில்லை. தண்டனை பெறவில்லை. இதுவரை இலங்கை போரில் காணாமல் போனவர்களை பற்றிய நிலை தெரியவில்லை என்று பேசினார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் வலுவாக நம்புகிறது என்றும், அவருடன் களத்தில் நின்றவர்களும், அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்பதை நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதற்கு நன்றி. சித்தராமையா எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தார் என்றும் தென் மாநிலங்களில் சங்பரிவார் நச்சு அரசியல் துடைத்து எறியப்பட்டதன் வெளிப்பாடு தான் கர்நாடகத் தேர்தல் முடிவு.
இன்று ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பெரும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தீர்ப்பு இது என்று பேசினார்.
டாஸ்மார்க் கடைகள் நடைமுறையில் இருக்கும் போது கள்ளச்சாராயம் செயல்பாட்டில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் இதில் மிகுந்த கவனத்துடன் தலையிட வேண்டும். மிகுந்த கவனத்தோடு இதில் தலையிட வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் எங்கெங்கெல்லாம் இருக்கிறது என்பதை கண்டறிவதற்கு தனி விசாரணை படை ஒன்றை அமைக்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருந்தால் அதற்கு காரணம் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல படிப்படியாக மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று தோழமையுடன் கேட்கிறோம் என்று பேசிய அவர், ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் இதனால் பாதிக்கிறார்கள் என்று வேதனையுடன் பேசினார்.
கஞ்சா போன்றவை புழக்கத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணமான மாபியா கும்பல் யாராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தடுக்க வேண்டும். இல்லையேல், திமுக தலைமையிலான இந்த அரசுக்கு மாபியா கும்பலால் களங்கம் ஏற்படும் என்று எச்சரித்தார்.
இதையும் வாசிக்க: திமுகவுக்கு நெருக்கடி தரும் இபிஎஸ்... பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்கத் திட்டம்
மேலும், திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் நல்லிணக்கத்துடன் இருக்கிறோம். எந்த மாற்றமும் இல்லை. இடைவெளியும் இல்லை. இந்த கூட்டணி பிற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியான கூட்டணியாக இருக்கிறது. வலிமையான கூட்டணியாக இருக்கிறது.
அதிமுக, பாஜகவுடன் பயணித்தால் அதிமுகவிற்கு பயன் இல்லை. பாஜகவுக்கு தான் பயன் தரும். எதிர்காலத்தில் அதிமுக, பாஜகவால் பலவீனம் படுத்தப்படும். அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் தேய்மானமடையும் வாய்ப்பு இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் தேர்தல் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தெளிவாக இருக்கிறோம். உறுதியாக இருக்கிறோம். அதே நேரத்தில் பாஜக எதிர்ப்பு சக்திகளை அணி திரட்டும் வகையில் செயல்படுத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thol Thirumaavalavan