புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை அல்லது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.மார்க்ஸ் ரவீந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, அந்த சம்பவத்தை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும் 90 நாட்கள் ஆகியும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் மாநில அரசு எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பட்டியலினத்தோருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தது.
இதையும் படிக்க : வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் - சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் விவகாரத்துக்காக உயர்நீதிமன்றத்தை அணுகுவதை விட்டு விட்டு ஏன் உச்சநீதிமன்றத்தை நாடுகிறார்கள்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, "தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆதிக்க சாதியினரால் தமிழகத்தில் உள்ள தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள். பட்டியலின மக்களுக்கு எதிரான தொடர் தாக்குதல்கள் தொடர்கின்றன. அவர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க : கூண்டு கிளி அல்ல.. பறக்கத் தயாராகிவிட்டது பாஜக': அண்ணாமலை பேச்சு
மனுதாரர் தரப்பின் வாதத்திற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "ஒரு குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்தால் அதன் மீது வாதிடுங்கள் மாறாக பொதுவாக, பரவலாக அனைத்தையும் ஒன்றுபடுத்தி குற்றச்சாட்டுகளை வைக்காதீர்கள், இது சரியானது அல்ல. இந்த விவகாரத்தில் வேறு திசையைக் பெரியதாக்க முயலாதீர்கள். உங்கள் கோரிக்கையை மட்டும் முன்வையுங்கள்” என எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் அனுமதி அளித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Caste, CBI, Supreme court