தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து கடந்த 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று தமிழகத்தின் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
காவல்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது. 3 கி.மீ தூரம் வரை இந்த ஊர்வலம் நடைபெற்று முடிவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தொடங்கிய பேரணி நான்கு முனை சந்திப்பு, பிஎஸ்என்எல் அலுவலகம் வழியாக காமராஜ் சாலை மற்றும் திருவிக சாலையை அடைந்து காந்தி சிலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவடைகிறது. பேரணியை தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை காசாங்குளம் பகுதியில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில் மூன்று டிஎஸ்பி க்கள் தலைமையில் அதிரடிப்படை வீரர்கள் மற்றும் போலீசார்கள் 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் நாகராஜா திடல் பகுதியில் இருந்து துவங்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம், அங்கிருந்து வேப்பமூடு சந்திப்பு, செட்டிக்குளம் வழியாக தெ.தி.இந்து கல்லூரி மைதானத்தில் நிறைவடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பேரணி செல்லும் பாதைகள் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகள் என 200 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
அதேபோன்று, திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் பேரணி துவங்கியது. நாகை மாவட்டத்தில், வேதாரண்யம் அடுத்துள்ள அகஸ்தியன் பள்ளியில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் துவங்க உள்ள நிலையில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜவஹர் தலைமையில், 1 கூடுதல் துணை கண்காணிப்பாளர்,6 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 10 ஆய்வாளர்கள் தலைமையில் 350 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில், ஆர்எஸ்எஸ் சார்பில் வீர சிவாஜியின் 350 ஆவது முடிசூடிய விழா மற்றும் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் புறநகர் பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய ராஜாஜி சிலையிலிருந்து ஆரம்பிக்கக்கூடிய அணிவகுப்பு ஊர்வலம் நகர் பேருந்து நிலையம், தேவர் சிலை, அரசு மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் ராஜாஜி சிலையில் முடிவடையும். அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் ராஜாஜி சிலை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய மேடையில் நடைபெற உள்ளது
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசபாளையம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி சுமார் 300க்கும் மேற்பட்டோர் பேரணியை தொடங்கினர். ஆரணி நகர் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓசூரில், ஆர்.எஸ்.எஸ் பேரணி ஓசூர் பாகலூர் ஹட்கோ வீட்டு வசதி வாரியம்பகுதியில் தொடங்கியது. ஓசூர் டி.எஸ்.பி. பாபுபிரசாத் தலைமையில் 284 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்தப் பேரணியில் 455 பேர் பங்கேற்றுள்ளனர்.
கட்டாயம் வாசிக்க: "தமிழ் மண்ணில் இருந்துதான் இந்திய வரலாறு தொடங்கப்பட வேண்டும்" - நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தருமபுரி மாவட்டத்தில், குமாரசாமி பேட்டையில் இருந்து 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் முக்கிய வீதிகளின் வழியாக ஆர்.எஸ்.எஸ். பேரணி துவங்கியது. அதேபோன்று, மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் 500 க்கும் மேற்பட்டோர் சீருடையுடன் பங்கேற்றனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பழனியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி துவங்கியது. பழனி பாதவிநாயகர் திருக்கோவிலில் இருந்து சரியாக 4 மணிக்கு துவங்கிய ஆர்.எஸ்.எஸ் பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பு. பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி வலம் வருகிறது. 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் தேரடியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: RSS