பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, சிறிய பட்டாசு ஆலை உரிமையாளர்கள் லாப நோக்கத்தை மட்டுமே வைத்து பணி செய்யும் காரணத்தால்தான் விபத்து ஏற்படுவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில் பட்டாசு ஆலையில் 9 பேர் உயிரிழந்ததை குறிப்பிட்டு பேசிய அவர், சிவகாசியில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவது போல அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு நடைமுறைகள் இருக்க வேண்டுமெனவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய உத்திரமேரூர் திமுக உறுப்பினர் சுந்தர், பட்டாசு விபத்து சம்பவம் அறிந்ததும் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கியுள்ளார் என்றும், பிரதமரும் உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார் எனவும் இதற்காக முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் மரகதம் குமாரவேல், பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 3 லட்சம் நிவாரணம் வழங்கியது போதாது என்றும், உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து பாமக சார்பில், ஜி.கே.மணி, விசிக சார்பில் எஸ்.எஸ்.பாலாஜி, தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், சி.பி.ஐ. சார்பில் மாரிமுத்து, சி.பி.எம் சார்பில் நாகை நாலி ஆகியோரும் இதே வெடி விபத்து குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும், பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்டால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் என நடைமுறை இருக்கின்றது. இதனால் பொருட்செலவு என அவர்களும் கவனத்துடன் செயல்படுவார்கள், தொழிலாளர் நலனிலும் அக்கறை காப்பார்கள் என்ற ஒரு நடைமுறை இருந்து வருகிறது. இதுபோன்ற, சிறிய பட்டாசு ஆலைகள் லாப நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதால்தான் விபத்து ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், திருவிழாவுக்கு அதிகளவு ஆட்களைக் கொண்டு பட்டாசு தயாரித்ததால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், வரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாத வகையில் அரசு தொடர் நடவடிக்கை மேற்கொள்வதோடு, பட்டாசு தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும் எனவும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.