மதிமுக அவைத்தலைவர் துரைசாமியின் கடிதம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துரை வைகோவிற்கு பதில் கூறமுடியாது என்று கூறியுள்ளார்.
மதிமுகவை, தாய்க் கழகமான திமுகவுடன் இணைத்து விடலாம் என்று பொதுச்செயலாளர் வைகோவிற்கு அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதி இருந்தார். அதில் தங்களது அண்மைக் கால நடவடிக்கைகளால் மதிமுகவிற்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை திமுகவுடன் இணைந்து விடுவது சம கால அரசியலுக்கு சாலச் சிறந்தது என்றும் துரைசாமி சாடினார். அவரின் இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பரபரப்பை ஏற்படுத்தவே திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருப்பதாகவும், அவரது குற்றச்சாட்டில் துளி அளவும் உண்மை கிடையாது என்றும் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ விளக்கமளித்துள்ளார்.
மேலும், திமுகவுடன் மதிமுகவை இணைப்பதில் கட்சியினருக்குத் துளியும் உடன்பாடில்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்தாலும் மதிமுகவுக்கு என்று தனிப்பட்ட கொள்கை உள்ளது. மனக்கசப்பு காரணமாக திமுக- மதிமுக இணைப்பு என அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியதாகவும், மூத்த நிர்வாகி என்ற மரியாதை காரணமாக துரைசாமி மீது நடவடிக்கை இல்லை என்றும் துரை வைகோ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், துரை வைகோ சின்ன பையன், அவருக்கெல்லாம் பதில் கூறமுடியாது என்று அவைத்தலைவர் துரைசாமி கூறியுள்ளார். தொடர்ந்து, வாரிசு அரசியலுக்கு எதிராகத்தான் மதிமுக தொடங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும், வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளேன். அவருடைய பதிலுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று துரைசாமி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Durai Vaiko, MDMK, Mdmk leader vaiko