கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியும் முதலமைச்சர் நாற்காலியில் யாரை அமர வைப்பது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் வணக்கம் தமிழ்நாடு நிகழ்ச்சியில் ஆசிரியர் கார்த்திகைசெல்வன் நடத்திய நேர்காணலில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பங்கேற்று தனது கருத்துகளை பதிவு செய்தார்.
கேள்வி : கர்நாடகாவில் முதலமைச்சர் யார் சித்தராமையாவா? டி.கே.சிவக்குமாரா?
பதில் : அந்த கேள்விக்கு பதில் சொல்லும் தகுதி என்னிடம் இல்லை. அந்த முடிவை கர்நாடக காங்கிரஸ், அகில இந்திய தலைமை தான் முடிவெடுக்கும்.
கேள்வி : கர்நாடகா வெற்றிக்கான காரணம் யார்?
பதில் : கர்நாடகா வெற்றிக்கு ஒருவர் மட்டுமே காரணம் என கூற முடியாது. தேர்தல் தோல்விக்கு ஒருவரை மட்டுமே காரணம் எனக் கூறவது எப்படி தவறோ. அதுபோல வெற்றிக்கு ஒருவர் தான் காரணம் எனக் கூற முடியாது. இது கட்சியின் வெற்றி. அகில இந்திய தலைமை, பிரச்சார செய்தவர்கள், மாநில தலைமை என எல்லாவற்றுக்கும் மேலாக கட்சியின் கடைக்கோடி தொண்டனுக்கு கிடைத்த வெற்றி என்றுதான் பார்க்க வேண்டும். எனவே இது கட்சிக்கு கிடைத்த வெற்றி. தனி நபருக்கு கிடைத்த வெற்றி என்று யாரும் சொல்ல மாட்டார்கள். கண்டிப்பாக நான் சொல்ல மாட்டேன்.
டி.கே.சிவக்குமார் என்னுடைய நண்பர். அவருடைய உழைப்பு பெரிய உழைப்பு. அவருக்கு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ எல்லாம் கொடுத்த தொல்லையை தாண்டி கட்சியை விட்டு ஒருநாள் கூட செல்லாமல். கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவேன் என்ற வேள்வியோடு அவர் பணியாற்றினார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்து பணியாற்றினார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவருக்கு மட்டும் தான் இந்த பெருமைசேரும். மற்றவர்கள் எல்லாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லும் இடத்தில் நான் இல்லை. அப்படி சொல்வதும் தவறு.
கேள்வி : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியை தேசிய அளவில் ஒப்பிட முடியாது என்ற கருத்தை எந்த அடிப்படையில் முன் வைக்கிறீர்கள்?
பதில் : இந்த வெற்றி ஒரு பெரிய பூஸ்ட். இது மகத்தான வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. பிரதமர் மோடி வந்து பிரச்சாரம் செய்தும் காங்கிரஸ் மாநில தலைமை, அகில இந்திய தலைமை ஒன்றாக இருந்து ஒரு பெரிய வெற்றியை அடைந்திருக்கிறோம்.
ஒரு தேர்தலில் ஒரு மாநிலத்தில் வெற்றி அடைந்தாலே அது எல்லா மாநிலங்களிலும் பிரதிபலிக்கும் என என்னால் சொல்ல முடியாது. இதுதான் இயற்கையின் நியதி. குஜராத்தில் பாஜக ஜெயித்தது அதுக்காக இந்தியா முழுவதும் பாஜக ஜெயிக்கும் என்று சொல்ல முடியுமா? முடியாது.. ஒவ்வொரு தேர்தலில் இருந்தும் சில பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த வெற்றியில் இருந்து பல பாடங்களை நாங்கள் கற்றுக்கொள்ளலாம்.
என்ன வாக்குறுதி கொடுத்தாலும் பாசிடிவ் வாக்குறுதிகளை முன்கூட்டியே கொடுக்க வேண்டும் . மக்கள் மனதில் பதியும் அளவுக்கு அதனை முன்கூட்டியே சொல்ல வேண்டும். மக்கள் எளிதாக அந்த வாக்குறுதிகளை புரிந்துக்கொண்டால் நிச்சயமாக பலன் கிடைக்கும். அதற்கும் மேலாக மாநில தலைமையை முன்நிறுத்த வேண்டும். மாநில தலைவர்களை முன்நிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என பல விஷயங்களை நாம் கேட்டுக்கொள்ளலாம். கர்நாடகா கற்றுக்கொடுத்த பாடத்தை மற்ற மாநிலங்களில் அமல்படுத்தினால் அங்கு வெற்றி பெறலாம்.
கேள்வி : மாநில தலைமையை முன்னிலை படுத்தனும்னு சொல்றீங்க... காங்கிரஸ் கட்சியில் அது நடக்கலையா..
பதில்: மாநில தலைமையை முன்நிறுத்த வேண்டும். மாநில தலைமையை முன்நிறுத்தினால்தான் அவர்கள் தேசிய தலைமையை என்னதான் முன்னிறுத்தினாலும் நாம் தோற்கடிக்கலாம். குஜராத்தை விடுங்க அது மோடியின் சொந்த மாநிலம். வேறு எங்கும் மோடியால் வெற்றி பெற முடியாது. உ.பி தேர்தல் வெற்றி, யோகிக்கான வெற்றிதான். மோடிக்கான வெற்றி இல்லை. மோடியால் எந்த சட்டமன்றத்திலும் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. மோடி கர்நாடகாவில் செய்யாத வேலையா.மாநில தலைமையை சித்தராமையா, டி.கே.சிவக்குமாரை முன்னிறுத்தியதால் நல்ல பலன் கிடைத்தது. ” எனக் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.